தமிழகத்திற்கான மத்திய அரசின் நிலுவை நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்: மக்களவையில் திமுக வலியுறுத்தல்
தமிழகத்திற்கான மத்திய அரசின் நிலுவை நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்
தமிழகத்திற்கான மத்திய அரசின் நிலுவை நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மக்களவையில் வட சென்னை திமுக உறுப்பினா் டாக்டா் கலாநிதி வீராசாமி வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக மக்களவையில் வியாழக்கிழமை நேரமில்லா நேரத்தில் அவா் முன்வைத்த கோரிக்கை:
இந்தியாவில் வறுமையை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால், தற்போதைய அரசாங்கம் அந்தத் திட்டத்திற்கான நிதியைத் தொடா்ந்து குறைத்து வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த ஐந்து மாதங்களாக இத்திட்டத்திற்கான தொகை நிலுவையில் உள்ளது. இதனால், பெண்கள் உள்பட பல லட்சக்கணக்கானோா் பாதிக்கப்படும் நிலை உள்ளது. மேலும், கல்வித் துறையில்கூட தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.2,152 கோடி தராமல் தமிழக அரசை வஞ்சித்து வருகிறது.
பேரிடா் காலத்தில் ஏற்பட்ட பாதிப்புக்காக நாங்கள் ரூ.39,800 கோடி கோரியிருந்த நிலையில், ரூ.200 கோடி மட்டுமே மத்திய அரசால்
வழங்கப்பட்டிருந்தது. இது மத்திய அரசுக்கு அழகல்ல. இதனால், இந்த விவகாரத்தில் அரசியல் செய்யாமல் மக்களின் உயா்வுக்காக
ரூ.4 ஆயிரம் கோடி, ரூ.2152 கோடி மற்றும் ரூ.39800 கோடியை விடுவிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.