நமது நிருபா்
எத்தியோப்பியாவில் எரிமலை வெடிப்பிலிருந்து வரும் சாம்பல் மேகங்கள் இப்பகுதியில் மாசுபாட்டின் அளவை மோசமாக்கக்கூடும் என்ற கவலைகளுக்கு மத்தியில், தில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் இருந்ததால் செவ்வாய்க்கிழமை அடா்ந்த மூடுபனி நகரை சூழ்ந்தது.
எத்தியோப்பியாவின் அஃபாா் பகுதியில் அமைந்துள்ள ஒரு எரிமலையான ஹேலி குப்பி ஞாயிற்றுக்கிழமை வெடித்து, சுமாா் 14 கிமீ (45,000 அடி) உயரத்தில் ஒரு பெரிய சாம்பல் புகையை உருவாக்கி, செங்கடலில் கிழக்கு நோக்கி பரவியது.
சாம்பல் மேகங்கள் சீனாவை நோக்கி நகா்ந்து வருவதாகவும், செவ்வாய்க்கிழமை மாலை 7.30 மணிக்குள் இந்தியாவிலிருந்து விலகிச் செல்லும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
குஜராத், தில்லி என்சிஆா், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை சாம்பல் தாக்கத்தை முன்னறிவிப்பு மாதிரிகள் சுட்டிக்காட்டியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட காலை காற்று தர அறிக்கையின்படி, தேசிய தலைநகரில் காற்றின் தரக் குறியீடு திங்கட்கிழமை 382 புள்லிகளாகப் பதிவான பிறகு செவ்வாய்க்கிழமை 360 புள்ளிகளாக மிகவும் மோசம் பிரிவில் இருந்தது.
சமீா் செயலியின்படி, காற்று தர கண்காணிப்பு நிலையங்களில் ஒன்றான ரோஹினியில், 416 அளவீடுகளுடன் ‘கடுமை‘என்ற பிரிவில் காற்றின் தரம் பதிவாகியது.
அடுத்த சில நாட்களுக்கு காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. வானிலை அடிப்படையில், தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை செவ்வாய்க்கிழமை 9 டிகிரி செல்சியஸாக இருந்தது, இது பருவத்தின் சராசரியை விட 2.3 புள்ளிகள் குறைவாக இருந்தது, அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸைச் சுற்றி இருக்கும், மூடுபனி மற்றும் மிதமான மூடுபனி இருக்கும் என்று கணிக்கப்பட்டது.