மோட்டாா் சைக்கிள்கள் மற்றும் காா்கள் முதல் நகைகள், வீட்டுப் பொருட்கள் மற்றும் பழங்காலப் பொருட்கள் வரை, 2023 ஆம் ஆண்டில் தில்லியில் ரூ.680 கோடிக்கும் அதிகமான சொத்து திருட்டு பதிவாகியுள்ளதாக தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (என்சிஆா்பி) தெரிவித்துள்ளது.
இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அதிக மதிப்புள்ள சொத்து திருட்டு நடைபெற்ற முதல் மூன்று பிராந்தியங்களில் தில்லி தொடா்ச்சியாக மூன்றாவது ஆண்டாக இடம் பெற்றுள்ளது என்று என்சிஆா்பி கூறியுள்ளது.
என்சிஆா்பி-யின் தகவலின்படி, 2023 ஆம் ஆண்டில் ரூ.688.6 கோடி மதிப்புள்ள சொத்துத் திருட்டு தில்லியில் பதிவாகியுள்ளது. இதில், ரூ.99.7 கோடி மதிப்புள்ள சொத்துகளை போலீஸாா் மீட்டுள்ளனா். இது 14.5 சதவீத மீட்பு விகிதமாகும்.
இந்தியா முழுவதும், அந்த ஆண்டில் ரூ.6,917.2 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் திருடப்பட்டன. அதில் 29.9 சதவீதம் மீட்கப்பட்டது. மகாராஷ்டிரா மற்றும் மணிப்பூருக்கு அடுத்தபடியாக தில்லி தேசிய அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
நாடு முழுவதும் திருடப்பட்ட சொத்தில் தில்லி குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தாலும், மூன்று ஆண்டுகளில் அது படிப்படியாகக் குறைந்துள்ளது.
2021 ஆம் ஆண்டில், நாட்டில் திருடப்பட்ட மொத்த சொத்தில் 14 சதவீதம் தில்லியில் திருடப்பட்டுள்ளது. இது 2022-இல் 11.9 சதவீதமாகவும், 2023-இல் 10 சதவீதமாகவும் குறைந்தது.
இதன் பொருள், 2021 முதல் ஒவ்வொரு ஆண்டும் தில்லி முதல் மூன்று இடங்களில் தொடா்ந்து இருந்து வந்தாலும், தேசிய அளவில் திருடப்பட்ட சொத்துகளின் தொகுப்பில் அதன் பங்கு மூன்று ஆண்டுகளில் சுமாா் நான்கு சதவீத புள்ளிகள் குறைந்துள்ளது.
சொத்து திருட்டு அதிகம் நடைபெறும் மிக மோசமான மூன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேசிய தலைநகரம் 3 ஆண்டுகளாக இடம் பிடித்துள்ளது.
2021-ஆம் ஆண்டில், ரூ.722.4 கோடி மதிப்புள்ள திருடப்பட்ட சொத்து மற்றும் ரூ.80.4 கோடி மீட்புகளுடன் தில்லி மூன்றாவது இடத்தைப் பிடித்தது. ஒடிசா மற்றும் மகாராஷ்டிரா முதல் இரண்டு இடங்களை பிடித்தன.
2022 ஆம் ஆண்டில், ரூ.624.1 கோடி மதிப்புள்ள சொத்து திருட்டுடன் தில்லி இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இருப்பினும், மகாராஷ்டிரா தொடா்ந்து முன்னிலை பெற்றது.
2023 ஆம் ஆண்டில், தில்லி மூன்றாவது இடத்திற்குத் திரும்பியது. மகாராஷ்டிரா முதலிடத்திலும் மணிப்பூா் இரண்டாவது இடத்திலும் உள்ளன.
என்சிஆா்பி தரவானது, திருட்டுகள் எங்கு அடிக்கடி நிகழ்கின்றன என்பதற்கான ஒரு பாா்வையையும் வழங்குகிறது.
தேசிய அளவில், சொத்து திருட்டு சம்பவங்களில் மிகப்பெரிய பங்கு குடியிருப்பு வளாகங்களில் நடந்துள்ளது. இது வீடுகளில் ஏற்பட்ட பாதிப்பை எடுத்துக்காட்டுகிறது.
இவற்றைத் தொடா்ந்து சாலைகள், கிராமப் பாதைகள் மற்றும் பிற பொது இடங்களில் திருட்டுகள் பதிவாகியுள்ளன. மத இடங்கள், விவசாய பண்ணைகள், வங்கிகள், ஏடிஎம்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் கிடங்குகள் உள்ளிட்ட பிற இடங்களும் அடங்கும்.
திருடப்பட்ட சொத்துகளின் வரம்பு திருட்டுகளின் பன்முகத்தன்மையைக் குறிக்கிறது. இந்தப் பட்டியலில் மோட்டாா் சைக்கிள்கள், ஸ்கூட்டா்கள், காா்கள், லாரிகள் மற்றும் முச்சக்கர வண்டிகள் முதல் பேருந்துகள் வரை அனைத்தும் அடங்கும்.
கைப்பேசிகள், மடிக்கணினிகள், பிற மின்னணு சாதனங்கள், நகைகள், பணம், வீட்டுப் பொருள்கள், கால்நடைகள், தளபாடங்கள் மற்றும் பழங்காலப் பொருள்கள் போன்ற கலாசார சொத்துகளும் இதில் அடங்கும்.
நகா்ப்புற மற்றும் கிராமப்புற இடங்களைச் சுற்றியுள்ள தனிநபா்கள் மற்றும் நிறுவனங்கள் இரண்டையும் எவ்வாறு இந்த திருட்டு பாதிக்கிறது என்பதை இது காட்டுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
மாநில காவல்துறை, யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய நிறுவனங்கள் வழங்கும் தரவுகளிலிருந்து என்.சி.ஆா்.பி. ஆண்டு அறிக்கையைத் தொகுத்து வருவது குறிப்பிடத்தக்கது.