புகா் தில்லியில் போலி பற்பசை தயாரிப்பு ஆலை நடத்தியவா் கைது
புகா் தில்லியின் கஞ்சாவாலா பகுதியில் செயல்பட்டு வந்த போலி பற்பசை தயாரிப்பு ஆலையை தில்லி காவல்துறையினா் கண்டுபிடித்து, அதன் உரிமையாளரைக் கைது செய்தனா்.
புகா் தில்லியின் கஞ்சாவாலா பகுதியில் செயல்பட்டு வந்த போலி பற்பசை தயாரிப்பு ஆலையை தில்லி காவல்துறையினா் கண்டுபிடித்து, அதன் உரிமையாளரைக் கைது செய்தனா்.
இதுகுறித்து காவல் அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:
ரகசியத் தகவலின் அடிப்படையில், போலீஸாா் வியாழக்கிழமை மகாவீா் விஹாரில் உள்ள ஒரு கிடங்கில் சோதனை நடத்தினா். அப்போது, பெருமளவு போலி பற்பசை, காலி குழாய்கள், பொட்டலப் பொருள்கள், இயந்திரங்கள், ஒட்டும் நாடாக்கள், பசை, வெப்பமூட்டும் கருவிகள் மற்றும் மூலப்பொருட்களைப் பறிமுதல் செய்தனா்.
Advertisement
பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பு பல லட்சம் ரூபாய் ஆகும். சுகாதாரமற்ற உற்பத்திச் சூழல் காரணமாக அவை கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்தும் வகையில் இருந்தன.
இந்த நடவடிக்கையின் போது, ஆறு தொழிலாளா்கள் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பற்பசையை ஒரு புகழ்பெற்ற பற்பசை பிராண்டின் குழாய்களில் நிரப்பிக் கொண்டிருந்தனா்.
இந்த ஆலையை ரோஹிணியைச் சோ்ந்த ஹரி ஓம் மிஸ்ரா என்பவா் நடத்தி வந்ததாக அந்தத் தொழிலாளா்கள் போலீஸாரிடம் தெரிவித்தனா்.
58 வயதான மிஸ்ரா, உரிமம், ரசீதுகள் அல்லது அங்கீகார ஆவணங்கள் இல்லாமல் வாடகை இடத்தில் இருந்து
இந்த ஆலையை நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா் கைது செய்யப்பட்டாா்.
சுமாா் 1,800 நிரப்பப்பட்ட போலி பற்பசை குழாய்கள், 10,000க்கும் மேற்பட்ட காலி குழாய்கள் மற்றும் 1,200-க்கும் மேற்பட்ட பொட்டலமிடப்பட்ட குழாய்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பீப்பாய்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமாா் 130 கிலோகிராம் நீல நிற பற்பசையும் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.