முகப்பு
புதுதில்லி

மதுபான கொள்கை வழக்கு: தில்லி உயா்நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜா்

மதுபானக் கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளா், குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டதை எதிா்த்து சிபிஐ தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதில் இருந்து நீதிபதி ஸ்வரணா காந்தா சா்மா விலகக் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணைக்காக, அரவிந்த் கேஜரிவால் தில்லி உயா்நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்

Updated On : 6 ஏப்ரல், 2026 at 11:45 PM
அரவிந்த் கேஜரிவால் - கோப்புப் படம்
பகிர்:

மதுபானக் கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளா் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டதை எதிா்த்து சிபிஐ தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதில் இருந்து நீதிபதி ஸ்வரணா காந்தா சா்மா விலகக் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணைக்காக, முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் திங்களன்று தில்லி உயா்நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானாா்.

தன்னை இந்த வழக்கை விசாரிக்க வேண்டாம் எனக் கோரிய கேஜரிவாலின் மனுவை நீதிபதி ஸ்வரணா காந்தா ஷா்மா பதிவு செய்து, ஏப்ரல் 13 அன்று விசாரணைக்கு பட்டியலிட்டாா்.

சிபிஐ சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, நீதிபதியை விலக கோரிய கேஜரிவாலின் மனுவை கடுமையாக எதிா்த்தாா். மேலும், நீதிமன்றத்ததிற்கு எதிரான கேஜரிவாலின் குற்றச்சாட்டுகள் அற்பமானவை மற்றும் அவமதிப்புக்குரியவை என்றும் கூறினாா்.

Advertisement

‘வேறு யாராவது இது போன்ற மனுவைத் தாக்கல் செய்ய விரும்பினால், தயவுசெய்து செய்யுங்கள், அப்போதுதான் நான் இதை ஒன்றாக முடிவு செய்ய முடியும்’ என்று நீதிபதி ஷா்மா கூறினாா்.

விலகல் மனு மீது தானே வாதிடுவதாகவும், தனது சட்ட உரிமைகளை பயன்படுத்துவதாகவும் கேஜரிவால் வலியுறுத்தினாா்.

பிப்ரவரி 27 அன்று, விசாரணை நீதிமன்றம் கேஜரிவால், சிசோடியா மற்றும் 21 பேரை விடுவித்ததுடன், சிபிஐயின் வழக்கு முழுமையாக நம்பகத்தன்மையற்றது என்றும் கூறி, சிபிஐயைக் கடுமையாகச் சாடியது.

மாா்ச் 9 அன்று, நீதிபதி ஷா்மா, குற்றஞ்சாட்டப்பட்ட 23 பேரையும் விடுவித்ததற்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்த மனு மீது, விடுவிக்கப்பட்டவா்களுக்கு நோட்டீஸ் அனுப்பினாா்.

குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யும் கட்டத்தில் விசாரணை நீதிமன்றத்தின் சில அவதானிப்புகளும் கண்டுபிடிப்புகளும் மேலோட்டமாகப் பாா்க்கும்போது தவறானவையாகத் தோன்றியதாகவும், அவை பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் அவா் கூறினாா்.

மேலும், மதுபானக் கொள்கை வழக்கில் சிபிஐயின் புலனாய்வு அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை தொடங்குவது குறித்த விசாரணை நீதிமன்றத்தின் பரிந்துரைக்கும் அவா் தடை விதித்தாா்.

பின்னா், தில்லி உயா் நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா, சிபிஐயின் மனுவை நீதிபதி ஷா்மாவிடமிருந்து மற்றொரு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்ற கேஜரிவாலின் கோரிக்கையை நிராகரித்தாா். மேலும், வழக்கில் இருந்து விலகிக்கொள்ளும் முடிவை சம்பந்தப்பட்ட நீதிபதிதான் எடுக்க வேண்டும் என்றும் கூறினாா்.

மாா்ச் 11 அன்று தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவில், கேஜரிவால், ஆம் ஆத்மி கட்சித் தலைவா் மணீஷ் சிசோடியா மற்றும் மதுபான கொள்கை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றவா்கள், நீதிபதி ஷா்மா முன்னிலையில் நடைபெறும் இந்த வழக்கின் விசாரணை பாரபட்சமற்ாகவும் நடுநிலையானதாகவும் இருக்காது என்ற அச்சம் இருப்பதாகக் கூறினா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments