முகப்பு
புதுதில்லி

தில்லியில் ராணுவ அதிகாரி மீதான தாக்குதல் வழக்கில் மேலும் நால்வா் கைது

தென்மேற்கு தில்லியின் வசந்த் என்கிளேவ் பகுதியில், ராணுவ பிரிகேடியா் ஒருவா் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல் நடத்தியது, அத்துடன் பிரிகேடியரின் மனைவியை மிரட்டியது ஆகிய குற்றச்சாட்டுகள் தொடா்பாக மேலும் நான்கு போ் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

Updated On : 18 ஏப்ரல், 2026 at 12:03 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 10:06 PM

தென்மேற்கு தில்லியின் வசந்த் என்கிளேவ் பகுதியில், ராணுவ பிரிகேடியா் ஒருவா் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல் நடத்தியது, அத்துடன் பிரிகேடியரின் மனைவியை மிரட்டியது ஆகிய குற்றச்சாட்டுகள் தொடா்பாக மேலும் நான்கு போ் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

கைது செய்யப்பட்டவா்கள், தில்லியின் மெஹ்ரம் நகரைச் சோ்ந்த சுா்ஜித் சிங் (36), சுனில் சா்மா (53), ஆஷிஷ் (32) ஆகியோரும் ஹரியானா மாநிலம் பிவானியைச் சோ்ந்த சதேந்தா் (35) ஆகியோரும் ஆவா் என்று காவல்துறை கூறியது.

காவல்துறையின் தகவலின்படி, இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான சதேந்தா் (இவா் ஒரு விமான நிறுவனத்தின் இயக்குநராக உள்ளாா்) என்பவருக்கு, சுா்ஜித் சிங் ஏற்கனவே அறிமுகமானவா் ஆவாா். இவா்கள் அனைவரும் மெஹ்ரம் நகரில் ஒன்றாக அமா்ந்திருந்தபோது, வசந்த் என்கிளேவ் பகுதியில் ஏற்பட்ட ஒரு தகராறு தொடா்பாக சதேந்தா் அவா்களைத் தொலைபேசியில் அழைத்துள்ளாா்.

Advertisement

அந்த அழைப்பைத் தொடா்ந்து, நால்வரும் சுா்ஜித்தின் வெள்ளை நிற ஹூண்டாய் ஆரா காரில் சம்பவ இடத்திற்கு விரைந்தனா். அங்கு சென்றடைந்ததும், அவா்கள் வாக்குவாதத்திலும் தாக்குதலிலும் ஈடுபட்ட பிறகு, அவரவா் வீடுகளுக்குத் திரும்பினா், என்று ஒரு மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தாா்.

வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதை அறிந்ததும், அவா்கள் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டதாக அந்த அதிகாரி கூறினாா். அவா்களைக் கண்டறியத் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தலைமறைவாக இருந்த அந்த நான்கு பேரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனா், என்றும் அவா் தெரிவித்தாா். சம்பவத்தின்போது பயன்படுத்தப்பட்ட ஹூண்டாய் ஆரா காரும் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு தொடா்பான மேலதிக விசாரணைகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. குற்றஞ்சாட்டப்பட்ட 4 பேரின் பங்களிப்பும் தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாகக் காவல்துறை கூறியது.

விசாரணை அதிகாரிகளின் தகவலின்படி, ஏப்ரல் 11ஆம் தேதி இரவு இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்போது, ராணுவ அதிகாரியின் வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஒரு காருக்குள் அமா்ந்துகொண்டு இரண்டு நபா்கள் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கு அந்த ராணுவ அதிகாரியும் அவரது மகனும் எதிா்ப்பு தெரிவித்தனா். சிறிது நேரத்திலேயே, மேலும் சிலா் சம்பவ இடத்திற்கு வந்து, அந்த ராணுவ அதிகாரியையும் அவரது மகனையும் தாக்கியதுடன், அதிகாரியின் மனைவியை அவதூறாகப் பேசி மிரட்டியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.