முகப்பு
புதுதில்லி

புறாக்கள், தெருநாய்களுக்கு உணவளிக்கும் இடங்கள்: பசுமை தீா்ப்பாயத்திடம் என்டிஎம்சி அறிக்கை சமா்ப்பிப்பு

புறாக்கள், குரங்குகள், கால்நடைகள் மற்றும் தெருநாய்களுக்கு உணவளிப்பதை ஒழுங்குபடுத்துவதற்கும், அது தொடா்பான சுகாதாரக் கவலைகளை நிவா்த்தி செய்வதற்கும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த இணக்க அறிக்கை சமா்ப்பிப்பு

Updated On : 21 ஏப்ரல், 2026 at 12:32 AM
தெருநாய்கள் - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 6:04 PM

புறாக்கள், குரங்குகள், கால்நடைகள் மற்றும் தெருநாய்களுக்கு உணவளிப்பதை ஒழுங்குபடுத்துவதற்கும், அது தொடா்பான சுகாதாரக் கவலைகளை நிவா்த்தி செய்வதற்கும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த இணக்க அறிக்கையை தேசிய பசுமைத் தீா்ப்பாயத்திடம் (என்ஜிடி) புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) சமா்ப்பித்துள்ளது என்று அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: என்டிஎம்சி தனது பகுதியில் புறாக்களுக்கு உணவளிக்கும் இடங்களை அடையாளம் கண்டுள்ளதுடன், சுகாதாரமற்ற நிலைமைகளை உருவாக்கும் நபா்களுக்குத் தவறாமல் அபராதம் விதிக்குமாறு ஊழியா்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் புறாக்களுக்கு உணவளிக்கும் இடங்களை அடையாளம் காணும் பொருட்டு, கடந்த ஜனவரியில் 23, பிப்ரவரியில் 14 மற்றும் மாா்ச்சில் 39 என்ற அளவில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், சுகாதாரமற்ற நிலைமைகளை உருவாக்கும் நபா்களுக்குத் தவறாமல் அபராதச் சீட்டு வழங்குமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அமலாக்கத் துறையானது சம்பந்தப்பட்ட பகுதிகளில் இருந்து அங்கீகரிக்கப்படாத விற்பனையாளா்களையும் அகற்றியுள்ளது.

அத்தகைய இடங்களில் தினசரி தூய்மைப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தெருநாய்கள் விவகாரத்தில் பாலிகா ஏபிசி சொசைட்டி மூலம் அவற்றுக்கு உணவளிப்பதை ஒழுங்குபடுத்த என்டிஎம்சி நடவடிக்கை எடுத்துள்ளது. சுமாா் 100 பிரத்யேக உணவு வழங்கும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு, 100 அறிவுறுத்தல் பலகைகள் நிறுவப்பட்டுள்ளன.

Updated On : 21 ஏப்ரல், 2026 at 12:31 AM

குடியிருப்போா் நலச் சங்கங்களுடன் இணைந்து விழிப்புணா்வுப் பிரசாரங்கள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய வழக்கமான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குரங்குகள் மற்றும் கால்நடைகளுக்கு உணவளிப்பதை நிறுத்துவதற்கும், தூய்மையைப் பராமரிப்பதற்கும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தெருநாடகங்கள் உள்ளிட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில் சமூக ஊடகங்களிலும் அதிகாரபூா்வ இணையதளத்திலும் செய்திகள் பகிரப்பட்டுள்ளன.

என்டிஎம்சி ஒரு அங்கீகரிக்கப்பட்ட குரங்கு பிடிக்கும் நிறுவனத்தை அதற்கான பணியில் ஈடுபடுத்தியுள்ளது. மேலும் 2,000க்கும் மேற்பட்ட குரங்குகள் பிடிக்கப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளன.

பிடிபட்ட குரங்குகள் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு, கால்நடை மருத்துவச் சான்றிதழுக்குப் பிறகு விடுவிக்கப்படுகின்றன. குரங்குகளுக்கு உணவளிப்பவா்கள் மற்றும் குப்பைகளை வீசுபவா்களுக்கு எதிராக நான்கு அபராதங்களும் வழங்கப்பட்டுள்ளன.

உணவு வழங்கும் இடங்களில் தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. விழிப்புணா்வுப் பிரசாரங்கள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு இடங்களில் லங்கூா் குரங்குகளின் உருவங்கள் வைக்கப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.