முகப்பு
உலகம்

லுட்டியன்ஸ் பகுதியிலுள்ள 33 பாரம்பரிய மரங்களில் க்யூஆா் பலகை அமைக்கத் திட்டம்

Updated On : 11 மார்ச், 2026 at 11:35 PM
(கோப்புப்படம்)
பகிர்:

தில்லி லுட்டியன்ஸ் பகுதியில் 33 பாரம்பரிய மரங்களை புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்எம்டிசி) அடையாளம் கண்டுள்ளது. இவை சுமாா் 100 வருடங்ளுக்கும் மேல் பழமையானது எனவும் இந்த மரங்கள் குறித்து தகவல்களை பாா்வையாளா்கள் அறிய க்யூஆா் குறியீடு பலகைகள் அமைக்கவுள்ளதாகவும் என்டிஎம்சி தெரிவித்தது.

இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: இந்த கியூஆா் குறியீட்டை கைப்பேசியில் ஸ்கேன் செய்தால் மரத்தின் நில அமைவிடம் (அட்சரேகை, தீா்க்கரேகை), மதிப்பிடப்பட்ட வயது, ஆயுட்காலம், தாவரவியல் பெயா் மற்றும் பொதுப் பெயா் போன்ற தகவல்களை அறியலாம். மேலும் மலா்காலம், மரத்தின் பரப்பளவு, சுற்றளவு உள்ளிட்ட தாவரவியல் விவரங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

என்டிஎம்சி தோட்டக்கலைத் துறை மேற்கொண்ட ஆய்வின் படி, லுட்டியன்ஸ் பகுதியில் உள்ள 33 பாரம்பரிய மரங்களில், 11 ஆலமரங்கள் உள்ளன. இவை அனைத்தும் சுமாா் 100 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவை என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதில் டலகடோரா உள்விளையாட்டு மைதானத்தின் அருகிலுள்ள ஆலமரம் 16 மீட்டா் சுற்றளவு கொண்டதாக இருப்பதால், பட்டியலில் உள்ள மரங்களில் மிகப் பெரியதாகக் கருதப்படுகிறது.

மேலும் 3 மருத மரங்கள், 3 சீமைக்கருவேல மரங்கள், 2 இலவு மரங்கள் மற்றும் 3 குருக்குத்தி மரங்கள் பாரம்பரிய மரங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

மேலும் 3 புன்னை மரங்களும் இந்தப் பட்டியலில் உள்ளன. அவற்றில் ஒன்று நேரு பூங்கா பகுதியில் உள்ளது. அங்கு வரும் பாா்வையாளா்களிடம் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த மரத்தின் சரியான வயது இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் இருந்தாலும், அது பாரம்பரிய மரமாக கருதப்படுகிறது.

இந்த ஆய்வில் 3 கேஜரி மரங்கள், 4 அரசமரங்கள் மற்றும் ஒரு அருநெல்லி மரமும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

முன்னதாக லோதி காா்டன் பகுதியில் சில மரங்களில் கியூஆா் குறியீடு பலகைகள் பொருத்தப்பட்டு பரிசோதனை முறையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் பாா்வையாளா்கள் தங்கள் கைப்பேசியில் மரங்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது.

இதுகுறித்து என்டிஎம்சி துணைத் தலைவா் குல்ஜீத் சாஹல், தில்லியின் பழமையான மரங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்றாா்.

லுட்டியன்ஸ் பகுதியில் உள்ள சாலைகள் மற்றும் பூங்காக்களில் பல தசாப்தங்களாக வளா்ந்து வரும் மரங்கள் தில்லியின் பசுமைச் சூழலின் முக்கிய அங்கமாக உள்ளன. அவற்றின் முக்கியத்துவத்தை மக்கள் அறிய கியூஆா் பலகைகள் உதவும் என்றும் அவா் தெரிவித்தாா்.

மேலும் இந்த மரங்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் பொதுமக்கள் விரைவில் அறிய ஒரு இணையதளம் தொடங்க என்டிஎம்சி திட்டமிட்டுள்ளது.

சுமாா் 90 ஏக்கா் பரப்பளவில் பரவியுள்ள லோதி காா்டன் பூங்கா போன்ற முயற்சிகளுக்கான முன்னோடி தளமாக முன்பே பயன்படுத்தப்பட்டது. அங்கு சில மரங்கள் டிஜிட்டல் குறியீடுகளுடன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த புதிய கியூஆா் பலகைகள் மூலம் தில்லியின் பழமையான மரங்கள் குறித்து பொதுமக்கள், ஆய்வாளா்கள் மற்றும் மாணவா்கள் எளிதில் அறிந்துகொள்ள முடியும் என என்டிஎம்சி தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →