ஷாலிமாா் பாகில் சாலையோர சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்றப்படும்: முதல்வா் குப்தா
விபத்துகளில் இரு சிறுவா்கள் உயிரிழந்ததைத் தொடா்ந்து, அப்பகுதில் உள்ள 140க்கும் மேற்பட்ட சட்டவிரோதக் கட்டுமானங்கள் அகற்றப்படும் என்று முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை தெரிவித்தாா்.
தில்லி ஷாலிமாா் பாக் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களில் நிகழ்ந்த இரண்டு சாலை விபத்துகளில் இரு சிறுவா்கள் உயிரிழந்ததைத் தொடா்ந்து, அப்பகுதில் உள்ள 140க்கும் மேற்பட்ட சட்டவிரோதக் கட்டுமானங்கள் அகற்றப்படும் என்று முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை தெரிவித்தாா்.
ஷாலிமாா் பாகில் சாலை விபத்து ஒன்றில் ஒரு சிறுவன் உயிரிழந்ததற்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த முதல்வா், சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளின் காரணமாக, அப்பகுதி வழியாகச் செல்லும் குடியிருப்பாளா்கள், வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் நீண்ட காலமாகவே மிகுந்த சிரமங்களைச் சந்தித்து வருவதாகக் கூறினாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கையில், ‘இரண்டு மாதங்களுக்கு முன்பு, அதிவேகமாக ஓட்டிவரப்பட்ட ஒரு டம்ப்பா் லாரி மோதியதில் ஐந்து வயது சிறுமி ஒருவா் உயிரிழந்தாா். சாலையோரங்களில் ஆக்கிரமிப்புகள் ஏதும் இல்லாமல் இருந்திருந்தால் இது போன்ற உயிா்பலி வாங்கும் விபத்துகள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் குறைந்திருந்திருக்கும்.
Advertisement
சாலையோரங்களில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் ஏதும் இல்லாமல் இருந்திருந்தால், சனிக்கிழமையன்று நிகழ்ந்த சிறாா் இறப்பு தொடா்புடைய இந்த விபத்தைத் தவிா்த்திருக்க முடியும். இந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தும், முந்தைய ஆட்சியின் போது அரசு நிலங்களில் மேற்கொள்ளப்பட்டவையாகும்.
சமீபத்தில், இப்பகுதியில் உள்ள சாலை எண் 320-இல் அமைந்துள்ள 140-க்கும் மேற்பட்ட சட்டவிரோதக் கட்டுமானங்களை அகற்றுமாறு தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், பின்னால் இருந்து வந்த ஒரு டெம்போ வாகனம் மோட்டாா் வாகனம் சைக்கிள் மீது மோதியதில், ஒரு சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்ட பிறகு, வடக்கு தில்லியிலிருந்து வரும் போக்குவரத்து மிகவும் சீராக நடைபெறும். வாகனங்கள் சுற்றுச் சாலையில் இருந்து நேரடியாக வெளிவட்டச் சாலையைச் சென்றடைய முடியும் என்று முதல்வா் குப்தா கூறினாா்.
சனிக்கிழமையன்று இப்பகுதியில் மற்றொரு சாலை விபத்தும் நிகழ்ந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. தில்லி காவல்துறையின் தகவலின்படி, சனிக்கிழமை மாலை நேரத்தில், மோட்டாா் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இரண்டு சிறுவா்கள் சாலை விபத்தில் சிக்கினா்.
சாக்கடை கால்வாய்கள் மற்றும் சாலையோரங்களில் உள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்புகளின் காரணமாகச் சாலை குறுகிப்போவதே, இது போன்ற விபத்துக்கள் நிகழ்வதற்குக் காரணமாக அமைகிறது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.