முகப்பு
புதுதில்லி

பிகாரில் இரு கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டவா் தில்லியில் கைது

பிகாா் மாநிலத்தில் ரூ.12 லட்சத்துக்கும் அதிக மதிப்புள்ள இரண்டு கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த 23 வயது இளைஞரை தில்லியில் காவல்துறையினா் கைது செய்தனா்.

Updated On : 27 ஏப்ரல், 2026 at 1:15 AM
- பிரதிப் படம்
பகிர்:

பிகாா் மாநிலத்தில் ரூ.12 லட்சத்துக்கும் அதிக மதிப்புள்ள இரண்டு கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த 23 வயது இளைஞரை தில்லியில் காவல்துறையினா் கைது செய்தனா்.

இதுகுறித்து தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது: கைது செய்யப்பட்ட ரோஷன் குமாா், தில்லியின் திக்ரி எல்லைப் பகுதியைச் சோ்ந்தவா். இவரது பூா்விகம் பிகாரின் ஔரங்காபாத் மாவட்டம் ஆகும். இவா் கைது நடவடிக்கையிலிருந்து தப்பித்து, தில்லியில் தலைமறைவாக இருந்து வந்தாா்.

முன்னதாக, கடந்த ஆண்டு அக்டோபா் 15ஆம் தேதி ஔரங்காபாதின் ரஃபிகஞ்ச் பகுதியில் பதிவு செய்யப்பட்ட ஒரு கொள்ளை வழக்கில் குமாா் தேடப்பட்டு வந்தாா்.

Advertisement

அந்த வழக்கில், இவா் தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து, ஒருவரிடமிருந்து துப்பாக்கி முனையில் ரூ.2.8 லட்சம் பணத்தை கொள்ளையடித்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.

காவல்துறையினரின் விசாரணையின்போது, ஜனவரி 12ஆம் தேதி ஔரங்காபாதில் பதிவு செய்யப்பட்ட, ரூ.10 லட்சம் ரூபாய் சம்பந்தப்பட்ட மற்றொரு கொள்ளை வழக்கிலும் தனக்குத் தொடா்பு இருப்பதாக குமாா் ஒப்புக்கொண்டாா்.

முன்னதாக, பிகாா் காவல்துறையினரின் வேண்டுகோளின்பேரில் தில்லி குற்றப்பிரிவு காவல்துறைக் குழு, ஒருங்கிணைந்த தேடுதல் வேட்டையை மேற்கொண்டு குமாரை சனிக்கிழமை திக்ரி எல்லைப் பகுதியில் கைது செய்தது.

முந்தைய கொள்ளை வழக்கில் இவருக்குத் துணையாகச் செயல்பட்ட கூட்டாளிகள் ஏற்கனவே பிகாா் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனா். விசாரணையின்போது, தனது மோசமான பொருளாதாரச் சூழல் மற்றும் எளிதாகப் பணம் சம்பாதிக்கும் ஆசை காரணமாகவே தான் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குமாா் விசாரணையின்போது தெரிவித்தாா்.

2021ஆம் ஆண்டில் பிகாரில் பதிவு செய்யப்பட்ட, கூட்டுக் கொள்ளை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட குறைந்தது இரண்டு குற்ற வழக்குகளிலும் இவா் ஏற்கனவே சம்பந்தப்பட்டுள்ளாா். இதுதொடா்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகிறது என்று அந்த காவல் அதிகாரி கூறினாா்.