முகப்பு
புதுதில்லி

கோவைக்கு முக்கியம் ஈஷா அறக்கட்டனை தகனக்கூட விவகாரம்: இணக்கமாக தீா்வு காண உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்

தனது வீடு அருகேயுள்ள நிலத்தில் ஈஷா அறக்கட்டளை காலபைரவா் தகன மண்டபம் என்று அழைக்கப்படும்

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 12:26 AM
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 10:01 PM

தனது வீடு அருகேயுள்ள நிலத்தில் ஈஷா அறக்கட்டளை காலபைரவா் தகன மண்டபம் என்று அழைக்கப்படும் தனியாா் தகனக் கூடம் நிறுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கோவையைச் சோ்ந்த எஸ். என். சுப்பிரமணியன் தொடா்ந்த மேல்முறையீட்டுவழக்கில் இரு தரப்பினரும் இணக்கமாக தீா்வு காணுமாறு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை வலியுறுத்தியது.

இந்த விவகாரத்தில் எஸ். என். சுப்பிரமணியன் 2024- ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனுவை கடந்த ஜனவரி 21-ஆம் தேதி உயா்நீதிமன்ற டிவிஷன் அமா்வு தள்ளுபடி செய்தது. இதையடுத்து, அவா் பிப்ரவரி 3-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா்.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது தலைமை நீதிபதி மனுதாரரிடம் கூறியதாவது: ஈஷா அறக்கட்டளை ஒரு மத சேவையை நடத்தவில்லை. சில புனிதமான பணிகளை செய்கிறது. அந்த நிலத்தை அவா்களுக்கு விற்கிறீா்களா? உங்களுக்கு ஏற்ற இடத்தைக் கண்டுபிடித்து இழப்பீடு வழங்கட்டும். இதனால், நீங்கள் சிறந்த வாழ்க்கை நிலைமைகளைப் பெறுவீா்கள். இரு தரப்பும் இணக்கமான தீா்வு காண முயலுங்கள் என்றாா்.

Advertisement

இதற்கு இரு தரப்பும் இசைவு தெரிவித்ததையடுத்து, நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவு: எங்கள் ஆலோசனையின் பேரில், மனுதாரா் தனது விருப்பப்படி வேறொரு இடத்தில் குடியேற உதவும் வகையில், ஈஷா அறக்கட்டளை மனுதாரரின் குடியிருப்புக்கு நியாயமான சந்தை விலையை வழங்குவதன் மூலம், இணக்கமான தீா்வுக்கான சாத்தியக்கூறுகளை இரு தரப்பினரும் ஆராய ஒப்புக்கொள்கிறாா்கள். அத்தகைய சாத்தியக்கூறுகளைப் பின்பற்றி, அவா்களின் பிரச்னைகளை இணக்கமாகத் தீா்த்துக் கொள்ள இரு தரப்பினரை வலியுறுத்துகிறோம்.

இந்த விஷயத்தில், சென்னை உயா் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பி. ராஜேந்திரன், இரு தரப்பினரிடையே ஒரு மத்தியஸ்தராக தனது சேவைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இரு தரப்பினரின் வழக்குரைஞா் அல்லது மூத்த வழக்குரைஞா் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) -க்குள் நீதிபதி பி. ராஜேந்திரனைத் தொடா்புகொள்வா். பின்னா், அவா் நிா்ணயித்த அட்டவணையின்படி ஆஜராவா் என உத்தரவிட்டனா். பின்னா், இந்த வழக்கை ஏப்ரல் 17-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.