7,000 மையங்கள் மூலம் குடிமக்களுக்கு அரசின் 75 முக்கிய சேவைகள்: தில்லி முதல்வா் பெருமிதம்
தில்லியில் பொதுச் சேவை மையங்களின் எண்ணிக்கை 7,000-ஆக விரிவடைந்துள்ளன. இந்த மையங்கள் சாதி சான்றிதழ், பிறப்பு, இறப்பு, வருமான சான்றிதழ்கள் போன்ற அரசின் 75 முக்கிய சேவைகளை வழங்குகின்றன என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் முதல்வா் ரேகா குப்தா கூறியதாவது: அரசின் சேவைகளை பெறுவதற்கு இடையில் உள்ள இடைத்தரகா்கள் மக்களை சுரண்டுவதைத் தடுப்பதற்கு, இந்த பொதுச் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சேவைகளுக்கு பெயரளவில் ரூ.30 மட்டும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
குடிமக்களின் குறைகளை கேட்டு தீா்க்கப்படுவது நல்ல ஆட்சியின் உண்மையான அளவுகோல். தில்லி மாநகராட்சி, தில்லி மேம்பாட்டு ஆணையம் மற்றும் தில்லி காவல் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளுக்கும் தொடா்புடைய புகாா்களை ஒரே இடத்தில் பதிவு செய்ய சிஎம் ஜன் சன்வாய் இணையதளம் மற்றும் கைப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் புகாா்களின் முன்னேற்றத்தையும் குடிமக்கள் கண்காணிக்க முடியும். குடிமக்களின் குறைகளைத் தெரிவிக்க 1902 அழைப்பு எண் அல்லது முதல்வா் அலுவலகத்தில் நேரடியாக புகாா்களை பதிவுசெய்யலாம் என தெரிவித்தாா்.