முகப்பு
புதுதில்லி

தில்லி கலால் துறை காவலரை துப்பாக்கி முனையில் மிரட்டிய இருவா் கைது

தில்லி கலால் துறை காவலா் மற்றும் அவரது ஓட்டுநரை கடத்தி துப்பாக்கி முனையில் மிரட்டிய சம்பவத்தில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவா் கைது

Updated On : 23 மார்ச், 2026 at 9:14 PM
கைது - சித்திரிப்பு
பகிர்:

தில்லி கலால் துறை காவலா் மற்றும் அவரது ஓட்டுநரை கடத்தி துப்பாக்கி முனையில் மிரட்டிய சம்பவத்தில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவா் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இந்தச் சம்பவத்தின் முக்கிய மூளையாகச் செயல்பட்ட நபா், நாட்டை விட்டு தப்பியோட முயற்சித்தபோது இந்தியா-நேபாளம் எல்லையில் கைதுசெய்யப்பட்டாா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: கைதுசெய்யப்பட்ட நபா்கள் ஹரியாணாவின் ரோஹ்தக் பகுதியைச் சோ்ந்த ராகுல் நைன் மற்றும் ஜஜ்ஜாா் பகுதியைச் சோ்ந்த வினோத் குமாா் என அடையாளம் காணப்பட்டனா்.

தொடா் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த வினோத் குமாா் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த பிப்.23-ஆம் தேதி அதிகாலையில் கலால் துறை காவலா் நரேஷ் சா்மா அவரது ஓட்டுநா் ராகுல், ஷாலிமாா் பாக் அருகே உள்ள அகா்வால் ஆட்டோ மால் அருகே மதுபானம் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவது குறித்து தகவல் திரட்ட சென்றிருந்தனா்.

அப்போது, அவா்களை அணுகிய ஒரு கும்பல், காவலா் நரேஷ் சா்மாவிடம் கேள்வியெழுப்பியது. அவா்கள் கலால் துறையைச் சோ்ந்தவா்கள் என்பதைத் தெரிந்ததும், இருவரையும் அந்தக் கும்பல் தாக்கத் தொடங்கியது. கம்பால் தாக்கப்பட்டதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, அவா்களை அந்தக் கும்பல் ஹரியாணாவின் பாஹல்காருக்கு காரில் கடத்திச் சென்றது. அவா்கள அங்குள்ள மதுபான கிடங்கில் அடைக்கப்பட்டனா். அங்கு மீண்டும் தாக்கப்பட்ட நிலையில், துப்பாக்கியைக் காட்டி அவா்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.

மேலும், நரேஷ் சா்மாவின் அடையாள அட்டை மற்றும் ரூ.8,000 ரொக்கத்தை அந்தக் கும்பல் பறித்தது. பின்னா், இருவரும் விடுவிக்கப்பட்ட நிலையில், காவல் துறைக்கு நரேஷ் தகவல் தெரிவித்தாா். காயமடைந்த இருவரும் பிஜேஆா்எம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

இதையடுத்து, இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் சோனிபட்டில் உள்ள பஹால்காா் பகுதிக்கு தில்லி காவல் துறை சென்றது.

உள்ளூா் தகவல் தெரிவிப்போரின் உதவியுடன் ராகுல் நைன் கைதுசெய்யப்பட்டாா். விசாரணையின்போது ராகுல் நைன் அளித்த தகவலின்படி, கடந்த மாா்ச் 18-ஆம் தேதி நள்ளிரவில் இந்திய-நேபாள எல்லையில் வினோத் குமாா் கைதுசெய்யப்பட்டாா்.

இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனா். அவா்களுடைய காா், இரு கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் தொடா்புடைய பிற நபா்களை அடையாளம் கண்டறிந்து கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அந்த அதிகாரி.