ஜார்க்கண்ட்: துப்பாக்கி முனையில் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் கைது; தங்கம், பணம் மீட்பு
ஜார்க்கண்டில் துப்பாக்கி முனையில் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜார்க்கண்டில் துப்பாக்கி முனையில் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜார்க்கண்டில் மாநிலம், பர்ஹி பகுதியில் உள்ள பொதுத்துறை வங்கியில் கடந்த 24ஆம் தேதி மேலாளர் மற்றும் நான்கு ஊழியர்களைத் துப்பாக்கி முனையில் மிரட்டி சுமார் 3.9 கிலோ தங்கம் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் வங்கி கொள்ளை தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடமிருந்து உருக்கிய தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஹசாரிபாக் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். வாரணாசியில் உள்ள ராஜ்பர் கிராமத்திற்கு அருகே சௌரப் குமார் யாதவ், முகமது அஃபசல் மற்றும் இந்தக் கொள்ளையின் மாஸ்டர் மைண்ட் எனக் கூறப்படும் பங்கஜ் சிங் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
Advertisement
மேலும், ரூ.1.28 கோடி மதிப்பிலான 912.22 கிராம் உருக்கிய தங்கமும், ரூ.20 லட்சம் ரொக்கமும் மீட்கப்பட்டதாக அந்த அதிகாரி கூறினார். ஹசாரிபாக் காவல் கண்காணிப்பாளர் அமன் குமார் கூறுகையில், வாரணாசி மாவட்டத்தில், உத்தரப் பிரதேச சிறப்பு அதிரடிப்படையின் உதவியுடன் மூன்று வெளிமாநிலக் குற்றவாளிகளை நாங்கள் கைது செய்தோம்.
வங்கி கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம், இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆறு கைபேசிகள் குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் ஒரு வங்கிக் கணக்கிற்கு மாற்றியிருந்த ரூ.6 லட்சத்தை நாங்கள் முடக்கியுள்ளோம். குற்றஞ்சாட்டப்பட்ட மூவருக்கும் குற்றப் பின்னணி உள்ளது.
மேலும் அவர்கள் மீது பல மாநிலங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. விசாரணையின் போது, குற்றவாளிகள் தங்களது மற்ற இரண்டு கூட்டாளிகளின் அடையாளங்களை வெளிப்படுத்தியதாகவும், கொள்ளையடிக்கப்பட்ட மீதமுள்ள தங்கம் மற்றும் ரொக்கம் தங்களிடம் இருப்பதாகவும் கூறினர்.
எனவே, மீதமுள்ள குற்றவாளிகளைப் பிடிக்க, போலீஸார் பல இடங்களில் சோதனைகளை நடத்தி வருவதாக தெரிவித்தார்.