FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

துப்பாக்கி முனையில் மிரட்டியது காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. கூச்சல்!

விசாரணையின்போது காவல் துறையினர் தாக்க முயற்சித்ததாகவும், துப்பாக்கி முனையில் மிரட்டியதாகவும் திமுக எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் பேசியது குறித்து...

Updated On : 20 ஜூலை 2026, 8:29 pm IST
மருத்துவமனை வாயிலில் செய்தியாளர்களை நோக்கிப் பேசிய திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் - எக்ஸ்
பகிர்:

விசாரணையின்போது காவல் துறையினர் தாக்க முயற்சித்ததாகவும், துப்பாக்கி முனையில் மிரட்டியதாகவும் திமுக எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் இன்று (ஜூலை 20) தெரிவித்தார்.

காவல் துறையின் விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் முன்பு மருத்துவமனை பரிசோதனைக்காக அழைத்துச் சென்றபோது பத்திரிகையாளர்களை நோக்கி அவர் இவ்வாறு கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் சட்டப்பேரவை திமுக உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன், கோவில்பட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் (ஜூலை 18) பேசும்போது, முதல்வர் விஜய் பேரவையை பூட்டினாலும் எலும்பை உடைப்போம் என மிரட்டும் வகையில் பேசியது சர்ச்சையானது.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணனிடம் தவெகவினர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்தனர்.

இந்தப் புகாரின் அடிப்படையில், திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை காவல் துறையினர் இன்று (ஜூலை 20) அவரின் வீட்டில் வைத்து கைது செய்தனர். அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன், முதல்வர் குறித்து ஒருமையிலும் அவதூறாகவும் பேசியதாக கைது செய்யப்பட்டு, பின்னர் அன்றைய தினமே விடுவிக்கப்பட்டார்.

தற்போது மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் 8 மணி நேரத்துக்கும் மேலாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்பு, அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அவரை காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.

மருத்துவமனை வாயிலில் அழைத்துச் செல்லும்போது செய்தியாளர்களை நோக்கி எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கூச்சலிட்டார். அப்போது பேசிய அவர், விசாரணையின்போது காவல் துறையினர் தன்னை தாக்க முயற்சித்ததாகக் கூறினார். மேலும், துப்பாக்கி முனையில் மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டினார்.

எனினும், காவல் துறையினர் அவரை பேசவிடாமல் தடுத்து மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்றனர்.

விளாத்திகுளம் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உள்ளிட்ட திமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

summary

Police threatened at gunpoint Arrested DMK MLA cries foul

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments