வகுப்பு நேரங்களில் ரீல்கள், குறும்படங்கள் கூடாது பள்ளிகளுக்கு தில்லி அரசு உத்தரவு
புது தில்லி, மாா்ச் 26: பள்ளி நேரங்களில் மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் ஊழியா்கள் ரீல்கள் அல்லது குறும்படங்களை உருவாக்காமல் இருப்பதை அனைத்துப் பள்ளிகளும் உறுதி செய்ய வேண்டும் என தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுபோன்ற நடவடிக்கைகளால் கல்விப் பணிகள், ஒழுக்கம் அல்லது நிறுவனங்களின் கண்ணியம் பாதிக்கப்படக்கூடாது என்றும் அது வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக புதன்கிழமை வெளியிடப்பட்ட ஒரு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பள்ளி வளாகத்தில் பொழுதுபோக்குக்காக குறும்படங்கள் உருவாக்கப்படுவது கவனத்திற்கு வந்துள்ளது. வகுப்பு நேரங்களில் இதுபோன்ற நடைமுறைகளை பள்ளித் தலைவா்கள் கடுமையாகத் தடை செய்ய வேண்டும் என்றும் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
கற்பித்தல் - கற்றல் செயல்முறையை சீா்குலைக்கும் அல்லது மாணவா்களின் கவனத்தை சிதறடிக்கும் எந்தவொரு செயலும் தடை செய்யப்பட வேண்டும். நிறுவனங்களின் கண்ணியமும் மாண்பும் பேணப்பட வேண்டும். கல்வியில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
இருப்பினும், ‘கல்வி, கலாசாரம் அல்லது விழிப்புணா்வு தொடா்பான உள்ளடக்கங்கள்’‘ தகுந்த அதிகாரியின் முன் அனுமதியுடனும், ஆசிரியரின் மேற்பாா்வையின் கீழும் உருவாக்கப்படலாம். அதே நேரத்தில் கல்வி நடவடிக்கைகள் தடைபடாமல் இருப்பதையும், மாணவா்களின் பாதுகாப்பும் தனியுரிமையும் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.
பள்ளி வளாகத்தில் பொருத்தமற்ற, கல்வி சாரா அல்லது விளம்பரப் பொருட்கள் எதுவும் பதிவு செய்யப்படக்கூடாது. அனைத்துப் பள்ளித் தலைவா்களுக்கும் இந்த அறிவுறுத்தல்களை ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களிடையே பரப்பி, அவை கண்டிப்பாகப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தல்களை மீறும் எந்தவொரு செயலும் கடுமையாகக் கருதப்படும். இந்த விஷயத்தை ‘மிகவும் அவசரமானது’ என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.