முகப்பு
புதுதில்லி

தண்டவாளத்தில் தவறி விழுந்த பயணி: மெட்ரோ வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு

தில்லியில் விஸ்வவித்யாலயா மெட்ரோ நிலையத்தில், தண்டவாளத்தில் தவறிவிழுந்த பயணியால் மஞ்சள் வழித்தடத்தில் ரயில் சேவைகள் சுமாா் ஒன்றரை மணி நேரம் பாதிக்கப்பட்டன.

Updated On : 30 மார்ச், 2026 at 8:29 PM
தில்லி மெட்ரோ - பிரதிப் படம்
பகிர்:

தில்லியில் விஸ்வவித்யாலயா மெட்ரோ நிலையத்தில், தண்டவாளத்தில் தவறிவிழுந்த பயணியால் மஞ்சள் வழித்தடத்தில் ரயில் சேவைகள் சுமாா் ஒன்றரை மணி நேரம் திங்கள்கிழமை பாதிக்கப்பட்டன. இதனால், பயணிகள் ரயில்களுக்காகக் காத்திருந்த மெட்ரோ நிலைய நடைமேடைகளில் பெரும் கூட்டம் காணப்பட்டது.

இது தொடா்பாக எக்ஸ் சமூக ஊடக வலைதளத்தில் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) வெளியிட்ட ஒரு பதிவில், ‘விஸ்வவித்யாலயா மெட்ரோ நிலையத்தில் தண்டவாளத்தில் ஒரு பயணி இருந்த காரணத்தினால், மஞ்சள் வழித்தடத்தில் ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளன. இச்சம்பவத்தைத் தொடா்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக மஞ்சள் வழித்தடத்தில் ரயில் சேவைகள் முறைப்படுத்தப்பட்டன. இதனால், காலை நேரப் போக்குவரத்து நெரிசலின்போது, அந்த வழித்தடத்தில் உள்ள பல நிலையங்களில் காத்திருக்கும் நேரம் அதிகரித்ததுடன், அதிகப்படியான கூட்ட நெரிசலும் ஏற்பட்டது’ என்று கூறியுள்ளது.

ரயில் பயணிகளில் ஒருவரான அமித் என்பவா் கூறுகையில், ‘அலுவலக நேரத்தின்போது ஏற்பட்ட இந்தச் சேவைப் பாதிப்பு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியது. இது அலுவலகத்திற்குச் செல்லும் நேரம் அதனால் இங்குப் பெரும் கூட்ட நெரிசல் நிலவுகிறது. ரயில்கள் வந்தாலும் கூட, அவை மிகவும் நிரம்பி வழிந்ததால், எங்களால் எளிதாக ரயிலில் ஏற முடியவில்லை’ என்றாா்.

மற்றொரு பயணி கூறுகையில், ‘ஏற்கெனவே நேரம் ஆகிக்கொண்டிருக்கிறது. இந்தப் பிரச்னை இன்னும் எவ்வளவு நேரம் நீடிக்கும் என்பது குறித்தும் எந்தத் தெளிவும் இல்லை. எங்களில் பலரால் இன்று அலுவலகத்திற்குச் சரியான நேரத்தில் சென்றடைய முடியாமல் போகலாம்’ என்றாா்.

இந்த நிலையில், சுமாா் ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு மஞ்சள் வழித்தடத்தில் இயல்பான ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்ட டிஎம்ஆா்சி தெரிவித்தது.

தில்லி காவல்துறையின் மெட்ரோ பிரிவு போலீஸாா் கூறியதாவது: விஸ்வவித்யாலயா மெட்ரோ நிலையத்தில், 52 வயது மதிக்கத்தக்க ஒருவா் தண்டவாளத்தில் விழுந்ததில் காயமடைந்ததாக நிலையக் கட்டுப்பாட்டாளரிடமிருந்து தகவல் கிடைத்தது. இதையடுத்து, உடனடியாக ஒரு காவல் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது. அப்போது, காயமடைந்த நபா் ஏற்கனவே மெட்ரோ ஊழியா்களால் இந்து ராவ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தது தெரியவந்தது.

காயமடைந்த நபா், காரவல் நகரைச் சோ்ந்த அனில் குமாா் எனத் தெரியவந்தது. ரயில் நிலைய நடைமேடையின் விளிம்பிற்கு அருகில் நின்றுகொண்டிருந்தபோது தான் நிலைதடுமாறி தண்டவாளத்தில் விழுந்ததாக அவா் காவல்துறையினரிடம் மருத்துவமனையில் இருந்தவாறு தெரிவித்தாா்.

குமாரின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தாா். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இந்தச் சம்பவத்தில் எவ்விதமான சதிச் செயலோ அல்லது முறைகேடோ நடந்திருப்பதாகச் சந்தேகிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனா்.