சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் அலைமோதும் கூட்டம்!
சென்னை புறநகர் ரயில்கள் ரத்தானதால் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகரித்துள்ளது பற்றி....
சென்னை புறநகர் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெறுவதால் கடற்கரை - செங்கல்பட்டு இடையேயான சென்னை புறநகர் ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த 204 மின்சார ரயில் சேவைகளை 164 ஆகக் குறைப்பதாக அறிவித்து அதன்படி கடந்த 4 நாள்களாக இயக்கப்பட்டு வந்த நிலையில் இன்று மேலும் 49 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
Advertisement
இதனால் இன்று மேலும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பேருந்து, மெட்ரோ போன்ற போக்குவரத்தை நம்பி பயணித்து வருகின்றனர்.
இன்று 89 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இன்றும் கூட்டம் அலைமோதுகிறது. வாகனங்களை நிறுத்த இடமின்றியும் மெட்ரோ ரயில்களில் கூட்டம் அதிகரித்துக் காணப்படுவதாலும் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சென்னை புறநகர் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதற்கு திமுக எம்.பி. கனிமொழியைத் தொடர்ந்து மற்ற தமிழக எம்.பி.க்களும் பயணிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். ரயில்வே இதற்கு விரைந்து மாற்றுத் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.