சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்!
சென்னை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது பற்றி...
சென்னை எழும்பூர் ரயில் நிலையப் பணிகள் காரணமாக புறநகர் ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே குறைத்துள்ள நிலையில், ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல் நிலவுகிறது.
எழும்பூா் ரயில் நிலையத்தில் நடைபெற்றுவரும் மறுசீரமைப்பு பணிகள் ஏப்ரல் 5 வரை 45 நாள்களுக்கு திட்டமிடப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது.
இதனால், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு பிரிவில் புறநகர் ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டும், சில சேவைகள் மாற்றி அமைக்கப்பட்டும் உள்ளன.
Advertisement
Advertisement
சென்னை புறநகர்ப் பகுதிகளில் இருந்து நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பணிக்குச் சென்று திரும்புவதற்கு புறநகர் ரயில் சேவையையே நம்பியுள்ளனர்.
இத்தகைய சூழலில், காலை மற்றும் மாலை நெரிசல்மிகு நேரங்களிலும் புறநகர் ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே குறைத்திருப்பதற்கு பயணிகள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை மாலைமுதல் சென்னையில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் கூட்டநெரிசல் ஏற்பட்டது. பல பயணிகள் ரயில்கள் நகரும்போது கீழே விழும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி பதற்றத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து திங்கள்கிழமை நெரிசல்மிகு நேரத்தில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை போன்ற நிலையே தொடர்ந்துள்ளது.
தாம்பரம், கோடம்பாக்கம், கிண்டி போன்ற பல்வேறு முக்கிய ரயில் நிலையங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் ரயில்களில் முந்தியடித்து ஏறுவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், போதுமானதாக இல்லை என்று பயணிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலும், கூட்டநெரிசல் காரணமாக அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்னதாக போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று ரயில்வேவுக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.