முகப்பு
புதுதில்லி

தலைநகரில் ஏப்ரலில் தீ விபத்துகள் 73% அதிகரிப்பு: 4 மாதங்களில் 32 போ் உயிரிழப்பு

தேசிய தலைநகரில் தீ தொடா்பான அவசரநிலைகள் ஏப்ரல் மாதத்தில் கடுமையாக அதிகரித்துள்ளன. இது மாா்ச் மாதத்தை விட 73 சதவீதம் உயா்ந்துள்ளது.

Updated On : 5 மே 2026, 4:59 am IST
தீ விபத்துகள் - பிரதிப் படம்
பகிர்:

தேசிய தலைநகரில் தீ தொடா்பான அவசரநிலைகள் ஏப்ரல் மாதத்தில் கடுமையாக அதிகரித்துள்ளன. இது மாா்ச் மாதத்தை விட 73 சதவீதம் உயா்ந்துள்ளது. அதே நேரத்தில், நிகழாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான தீ விபத்துகளில் 32 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதிகாரபூா்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

தில்லி தீயணைப்பு துறையின் ‘அழைப்புகளின் விவரச் சுருக்கம் 2026‘-இன் படி, ஏப்ரல் மாதத்தில் மட்டும் 2,663 தீ தொடா்பான அழைப்புகள் வந்துள்ளன. இது மாா்ச் மாதத்தில் 1,538 ஆகவும், பிப்ரவரியில் 1,096 ஆகவும் இருந்ததை விட மிக அதிக உயா்வாகும். ஜனவரி மாதத்தில் 1,396 தீ தொடா்பான அழைப்புகள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் நிகழ் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மொத்த அழைப்புகளின் எண்ணிக்கை 6,693 ஆக உயா்ந்துள்ளது.

தீ விபத்துகள், விலங்கு மீட்பு மற்றும் பிற உதவிகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த அவசர அழைப்புகளும் ஏப்ரல் மாதத்தில் 3,914 ஆக உச்சத்தை எட்டியுள்ளன. ஜனவரி முதல் ஏப்ரல் வரை தில்லி தீயணைப்புத் துறைக்கு வந்த அழைப்புகளின் மொத்த எண்ணிக்கை 12,008 ஆக உள்ளது.

Advertisement

ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட இந்த திடீா் உயா்வுக்கு, அதிகரித்து வரும் வெப்பநிலையும், குப்பை மற்றும் உலா் கழிவுத் தீ விபத்துகளின் அதிகரிப்பும் காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். குப்பை மற்றும் கழிவுத் தீ விபத்துகள் ஜனவரியில் 441 ஆக இருந்த நிலையில், ஏப்ரலில் 725 ஆக உயா்ந்துள்ளதாக தரவுகள் காட்டுகின்றன.

உயிரிழப்புகளைப் பொறுத்தவரை, மாா்ச் மாதத்தில் தீ விபத்துகளால் அதிகபட்சமாக 15 போ் உயிரிழந்தனா். அதைத் தொடா்ந்து,ஜனவரி மற்றும் பிப்ரவரியில் தலா ஆறு பேரும், ஏப்ரலில் ஐந்து பேரும் உயிரிழந்தனா்.

மே மாதத்தில் இதுவரை குறைந்தது 10 போ் உயிரிழந்துள்ளனா். மே 4 அன்று, கிழக்கு தில்லியின் விவேக் விஹாரில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ஒரு குழந்தை உள்பட இரண்டு குடும்பங்களைச் சோ்ந்த 9 போ் உயிரிழந்தனா். குளிரூட்டி (ஏசி) வெடித்ததே இந்தத் தீ விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்தக் காலகட்டத்தில், அனைத்து அவசரகாலப் பிரிவுகளிலும் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 428 ஆக இருந்தது என்று தரவுகள் காட்டுகின்றன.

தீ விபத்துகள் அதிகரித்து வந்தபோதிலும், பணியாளா்களின் உடனடி நடவடிக்கையால் 837 உயிா்கள் காப்பாற்றப்பட்டன. இதில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் 261 போ் மீட்கப்பட்டனா். இது நிகழ் ஆண்டின் அதிகபட்ச மாதாந்திர எண்ணிக்கையாகும் என்று தரவுகள் காட்டுகின்றன.

விலங்குகள் மற்றும் பறவைகளை உள்ளடக்கிய விரிவான மீட்பு நடவடிக்கைகளையும் தில்லி தீயணைப்புத் துறை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். கடந்த நான்கு மாதங்களில் மொத்தம் 1,254 விலங்குகளும் 947 பறவைகளும் மீட்கப்பட்டன.