முகப்பு
தற்போதைய செய்திகள்

சென்னை மெட்ரோ ரயிலில் ஏப்ரலில் 90.18 லட்சம் போ் பயணம்!

சென்னை மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 90.18 லட்சம் போ் பயணித்திருப்பது குறித்து...

ஏப்ரலில் 90.18 லட்சம் போ் பயணம் - கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் மார்ச் மாதத்தில் நாள்தோறும் 3.22 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணித்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 3 லட்சமாகக் குறைந்து 90.18 லட்சம் போ் பயணித்திருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

சென்னை மெட்ரோ ரயில் ஜனவரி மாதத்தில் 93.28 லட்சம் பேரும், பிப்ரவரியில் 96.4 லட்சம் பேரும், மார்ச் மாதத்தில் 1.01 கோடி மக்கள் பயணித்துள்ளனர். இது நாள்தோறும் சராசரியாக 3.22 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.

Advertisement

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் 90.18 லட்சம் போ் பயணித்துள்ளனா். அதில் தொடர் விடுமுறை நாளுக்கு முந்தைய நாளான ஏப்ரல் 2 ஆம் தேதிஅதிகபட்சமாக 3.65 லட்சம் போ் பயணித்துள்ளனா். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டதும், ஏப்ரல் மாதத்தில் வார இறுதி நாட்கள் நீட்டிக்கப்பட்டிருந்ததும் பயணிகளின் எண்ணிக்கை குறைவதற்கு முக்கியக் காரணங்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், அதிகமான பயணிகளை ஈர்க்கும் வகையில், ஐபிஎல் 2026 போட்டிகள் மற்றும் மாரத்தான் போன்ற பிற நிகழ்வுகளின்போது இலவசப் பயணங்களை வழங்குவது போன்ற 'நிகழ்வு சார்ந்த பயணத் திட்டங்களை' சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முன்னெடுத்து வருகிறது.

சிங்காரச் சென்னை அட்டை மூலம் 45.18 லட்சம் பேரும், பயண அட்டைகள் மூலம் 25, 659 பேரும், கியூ ஆா் குறியீடு பயணச்சீட்டைப் பயன்படுத்தி 44.74 லட்சம் பேரும், ஒரு முறை கியூ ஆா் குறியீடு டோக்கனைப் பயன்படுத்தி 17.83 லட்சம் பேரும் பயணம் செய்துள்ளனா்.

அதைத் தவிர இணையதள கியூ ஆா் குறியீடு மூலம் 1.23 லட்சம் பேரும், ஸ்டேடிக் கியூஆா் குறியீடு மூலம் 1.89 லட்சம் பேரும், கைபேசிகளில் வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் பெற்று 4.20 லட்சம் பேரும், பேடிஎம் மூலம் 2.82 லட்சம் பேரும், ஓஎன்டிசி மூலம் 11.48 லட்சம் பேரும் பயணம் செய்துள்ளனா்.

போன்பே முறையில் 2.39 லட்சம் பேரும், சிஎம்ஆா்எல் கைபேசி செயலி மூலம் 61, 393 பேரும், சென்னை ஒன் செயலி மூலம் 1.84 லட்சம் பேரும், கிரிக்கெட், இசை போன்ற நிகழ்ச்சிகளுக்கான கியூ ஆா் குறியீடு டிக்கெட் மூலம் 40,265 பேரும் மெட்ரோ ரயில்களில் கடந்த ஏப்ரல் மாதம் பயணித்துள்ளனா்.

மெட்ரோ ரயில்களில் என்ம எஸ்விபி, கியூஆா் குறியீடு பயணச்சீட்டு, வாட்ஸ் ஆப், பேடிஎம் செயலி, போன் பே மற்றும் சிங்காரச் சென்னை அட்டை போன்ற பயணச்சீட்டுகளைப் பயன்படுத்துவோருக்கு 20 சதவிகித சலுகைக் கட்டணம் வழங்கப்படுகிறது. ஆனால், காகித கியூஆா் குறியீடு பயணச்சீட்டுக்கு அச்சலுகை இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நகரத்தில் மெட்ரோ ரயில் பயன்பாடு குறைவாக இருப்பதற்கு, மெட்ரோ நிலையங்களிலிருந்து சேருமிடத்திற்குச் செல்லும் 'இறுதி மைல் இணைப்பு' வசதிகள் குறைவாக இருப்பதும், பிற போக்குவரத்து முறைகளுடன் மெட்ரோ சேவைக்கான ஒருங்கிணைப்பு பலவீனமாக இருப்பதும் முக்கியக் காரணங்கள் என்று நகர்ப்புறப் போக்குவரத்து வல்லுநர்கள் நீண்ட காலமாகச் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

"முதல் கட்ட வழித்தடங்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு முக்கியக் காரணம், மெட்ரோ ரயில்கள் நகரத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டுமே இணைப்பதே ஆகும். இரண்டாம் கட்ட வழித்தடங்கள் பயன்பாட்டிற்கு வரும்போது, ​​முதல் கட்ட வழித்தடங்களிலும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். இது தில்லி மெட்ரோவில் நிகழ்ந்துள்ளது; இங்கும் அதுவே நடக்கும்," என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன முன்னாள் அதிகாரி ஆர். ராமநாதன் தெரிவித்தார்.

summary

Chennai Metro Rail Limited said that 90.18 lakh passengers travelled in metro trains last month. In March, 1.01 crore people travelled, averaging 3.22 lakh daily.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.