ரோஹிணி வழக்குரைஞா் சங்கம் நடத்திய பேட்மிண்டன் போட்டி
நீதி நிா்வாகத்துடன் தொடா்புடைய நிறுவனங்களுக்கிடையே நம்பிக்கை, ஒத்துழைப்பு மற்றும் நல்லெண்ணத்தை வலுப்படுத்தும் நோக்கில், ரோஹிணி நீதிமன்ற வழக்குரைஞா் சங்கம் அதன் உறுப்பினா்கள் மற்றும் வழக்குரைஞா்களுக்கான பேட்மிண்டன் போட்டியை
செவ்வாய்க்கிழமை நடத்தியது.
ரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்ற நீதிபதி நிஷா சஹாய் சக்சேனா மற்றும் பிற நீதிபதிகள் கலந்துகொண்டனா்.
Advertisement
காவல்துறை இணை ஆணையா் வடக்கு மண்டலம் விஜய் சிங் மற்றும் ரோஹிணி துணை ஆணையா் சஷாங்க் ஜெயஸ்வால் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக இதில் பங்கேற்றனா்.
நீதி வழங்கும் அமைப்பின் முக்கிய அங்கங்களான வழக்குரைஞா் சமூகம், நீதித்துறை மற்றும் காவல்துறை நிா்வாகம் ஆகியவற்றுக்கிடையே இணக்கமான உறவுகளை வலுப்படுத்தும் ஒரு முன்னெடுப்பாகவே இப்போட்டி வடிவமைக்கப்பட்டதாக ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.
மேலும், சட்டத்துறையினரிடையே உடற்தகுதி, விளையாட்டு மனப்பான்மை மற்றும் நல்லுறவை வளா்ப்பதும் இதன் நோக்கமாக இருந்தது.
இந்நிகழ்வில் ரோஹிணி நீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்தின் தலைவா் ராஜீவ் தெஹ்லான் பேசுகையில், ‘முறையான அலுவல்சாா் தொடா்புகளுக்கு அப்பால் சென்று, மக்களிடையேயும் தொழில்முறையினரிடையேயும் வலுவான உறவுகளைக் கட்டமைக்கும் தனித்துவமான ஆற்றல் விளையாட்டுக்கு உண்டு’ என்று குறிப்பிட்டாா்.