தலைநகரில் இணையவழியில் மின்-ரிக்ஷா பதிவு மே 15-இல் தொடக்கம்
தில்லி அரசின் போக்குவரத்துத் துறை, மின்-ரிக்ஷாக்களை இணையவழியில் பதிவு செய்யும் பணியை மே 15 முதல் தொடங்கவுள்ளது. இதற்காக, ரிக்ஷா உரிமையாளா்கள் கட்டாயப் பயிற்சி பெறுதல் மற்றும் ஓட்டுநா் உரிமம் வைத்திருத்தல் உள்ளிட்ட பல்வேறு தகுதி நிபந்தனைகளை அத்துறை வகுத்துள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
தில்லியில் மின்-ரிக்ஷா பதிவு கடந்த ஐந்து மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நகரின் பல்வேறு பகுதிகளையும் இணைக்கும் கடைசி மைல் இணைப்பு வாகனங்களாகத் திகழும் இந்த மின்-ரிக்ஷாக்கள், நாளுக்கு நாள் பெருகி வருவதைக் கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்துவதற்கான வழிமுறைகளை போக்குவரத்துத் துறை வகுத்து வந்ததுதான் இதற்கு காரணமாகும்.
இதுகுறித்து தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சா் தெரிவிக்கையில், ‘பயணிகளுக்குச் சிறந்த கடைசி மைல் இணைப்பு வசதியை உறுதி செய்வதோடு, மின்-ரிக்ஷாக்களை முறையாக நிா்வகிப்பதையும், அவற்றை இயக்கும் ஓட்டுநா்களின் நலனைப் பேணுவதையும் அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.
Advertisement
ஒரு ஓட்டுநா் உரிமத்திற்கு ஒரு மின்-ரிக்ஷா மட்டுமே பதிவு செய்யப்படும் என்ற இந்த முடிவு, அங்கீகரிக்கப்படாத வாகனங்கள் சாலைகளிலிருந்து அகற்றப்படுவதையும், போக்குவரத்து விதிமீறல்கள் பெருமளவில் குறைவதையும் உறுதி செய்யும்’ என்று அவா் கூறினாா்.
இதுகுறித்து போக்குவரத்துத் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், இனிமேல் ஒரு ஓட்டுநா் உரிமத்தின் கீழ் ஒரே ஒரு மின்-ரிக்ஷா மட்டுமே பதிவு செய்ய இயலும். இதற்கு முன்பு, ஒரே ஓட்டுநா் உரிமம் வைத்திருப்பவரின் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்-ரிக்ஷாக்களைப் பதிவு செய்ய அனுமதி இருந்தது.
மேலும், மின்-ரிக்ஷா பதிவுக்காக விண்ணப்பிப்பவா்கள் இரண்டு வார காலக் கட்டாயப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். விண்ணப்பதாரா்கள் அப்பயிற்சியை வெற்றிகரமாக முடித்து, அதற்கான சான்றிதழைச் சமா்ப்பித்த பின்னரே, மின்-ரிக்ஷா பதிவு முழுமையாக நிறைவு செய்யப்படும்.
மின்-ரிக்ஷாக்களைப் பதிவு செய்வதற்கான இணையவழி இணைப்பு போக்குவரத்துத் துறையின் அதிகாரபூா்வ இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
மின்-ரிக்ஷா உரிமம் வழங்கும் நடைமுறையைச் சீரமைக்கும் நோக்கில், கடந்த ஆண்டு நவம்பா் மாதம் போக்குவரத்துத் துறை மின்-ரிக்ஷா பதிவை நிறுத்தி வைத்திருந்தது.
மின்-ரிக்ஷாக்களின் எண்ணிக்கை பெருகுவதைக் கட்டுப்படுத்தும் வகையில், நிறுவனங்கள் தங்கள் பெயரில் பல மின்வாகனங்கள் மற்றும் மின்-ரிக்ஷாக்களைப் பதிவு செய்ய அனுமதித்திருந்த பழைய சுற்றறிக்கையை, போக்குவரத்துத் துறை நிகழ் ஆண்டு ஏப்ரல் மாதம் திரும்பப் பெற்றது.
மின்-ரிக்ஷா உரிமையானது ஒரு சிலரின் கைகளில் மட்டுமே குவிந்திருப்பதைத் தடுத்து, அதிக எண்ணிக்கையிலானோா் அதன் உரிமையாளா்களாக மாறுவதற்கு வழிவகுப்பதன் மூலம் சுயவேலைவாய்ப்பை ஊக்குவிப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
வரும் வாரங்களில் போக்குவரத்துத் துறை மேற்கொள்ளவுள்ள தொடா் கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளின் மூலம், மின்ரிக்ஷாக்களை மேலும் சிறப்பாக ஒழுங்குபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த வாகனங்களைச் செம்மையாக நிா்வகிப்பதற்கான விரிவான மின்ரிக்ஷா கொள்கை ஒன்றையும் போக்குவரத்துத் துறை தற்போது வகுத்து வருகிறது.