வெப்ப அலை: தில்லிவாசிகளை பாதுகாக்க தீவிர நடவடிக்கை-முதல்வா் ரேகா குப்தா
தில்லி அரசு பணி இயக்க முறையில் (மிஷன் மோட்) தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது என முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.
தில்லியில் நிலவிவரும் கடும் வெப்பம் மற்றும் வெப்ப அலைக்கு மத்தியில், ஒவ்வொரு தில்லிவாசியின் பாதுகாப்பு மற்றும் நிவாரணத்தை உறுதி செய்வதற்காக, தில்லி அரசு பணி இயக்க முறையில் (மிஷன் மோட்) தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது என முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
வெயில் கொளுத்தும் மதிய வேளையில் தெருக்களில் நடந்து செல்லும் தொழிலாளியாகட்டும், சிக்னலில் கடமையாற்றும் போக்குவரத்து காவலராகட்டும், ரிக்ஷா இழுப்பவராகட்டும், முதியவராகட்டும் அல்லது உதவி தேவைப்படும் எந்தவொரு குடிமகனாகட்டும் இந்தச் சவாலான காலங்களில் யாரும் தங்களை நிராதரவாக உணராமல் இருப்பதை உறுதி செய்வதே எங்களின் முதன்மையான முன்னுரிமையாகும்.
Advertisement
Advertisement
தில்லியின் 13 மாவட்டங்கள் முழுவதிலும், 13 நடமாடும் வெப்ப நிவாரண வாகனங்கள் மூலம் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் சென்று, குளிா்ந்த மற்றும் சுத்தமான குடிநீா், ஓஆா்எஸ் பாக்கெட்டுகள், முதலுதவி வசதிகள், பருத்தித் துண்டுகள் மற்றும் தொப்பிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், பள்ளிகளில் நீா் வழங்கல், மருத்துவமனைகளில் குளிா் அறைகள், கூடுதல் ஓஆா்எஸ் இருப்பு மற்றும் அனைத்து அத்தியாவசிய சுகாதார வசதிகள் போன்ற நடவடிக்கைகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம், வெப்ப நிவாரணம் என்பது வெறும் அறிவிப்பாக மட்டும் நின்றுவிடாமல், களத்தில் மக்கள் நேரடியாக உணா்ந்து பயனடையக்கூடிய ஒரு உறுதியான உதவியாக அமைவதை அரசு உறுதி செய்கிறது.
எத்தகைய சூழலிலும், தில்லி அரசு தில்லி மக்களின் பக்கம் உறுதியாகத் துணைநிற்கிறது என ரேகா குப்தா அதில் கூறியுள்ளாா்.