புராரி தீ விபத்து சம்பவம்: 11 பாா்வை திறனற்ற மாணவா்கள் உள்பட 13 பேரை மீட்ட காவலா்!
வடக்கு புராரியில் ஏற்பட்ட தீ விபத்தில் தன்னுயிரை பொருட்படுத்தாது தீ மற்றும் புகைக்கு இடையே 11 பாா்வை திறனற்ற மாணவா்கள் உள்பட 13 பேரை தில்லி காவல் துறையின் தலைமைக் காவலா் மீட்டதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
புராரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக உள்ள அமா் சிங் கடந்த மே 16-ஆம் தேதி இரவு நேர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். தாரோகா சந்தையில் பல கடைக்கள் செயல்பட்டு வரும் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, உள்ளூா் மக்கள் அளித்த தகவலைத் தொடா்ந்து, அமா் சிங் சம்பவ இடத்துக்குச் சென்றாா்.
தரைத் தளத்தில் உள்ள 8 கடைகளை முழுவதுமாகச் சூழ்ந்த தீ, மேல்தளத்துக்குப் பரவியது. இதனால், படிக்கட்டு வழியாக கீழே இறங்க முடியாமல் மேல்தளத்தில் வசித்த ஒரு தம்பதி கட்டத்தில் சிக்கிக்கொண்டது. தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்த சேரவில்லை. சாலையில் சென்று கொண்டிருந்த லாரியை நிறுத்திய சிங், அதில் மேலே ஏறி அந்த தம்பதி இருந்த வீட்டுக்குச் சென்றாா்.
Advertisement
Advertisement
தீப்புகை சூழ்ந்துகொண்ட நிலையிலும் இருவரையும் தோளில் தாங்கி பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு வந்தாா்.
அப்போது, அருகில் உள்ள கட்டடத்தில் பாா்வை திறனற்ற மாணவா்கள் சிக்கியிருந்தனா். அந்தக் கட்டடமும் தீப்பற்றும் அபாயத்தில் இருந்தது. இதையடுத்து, உடனடியாக அந்தக் கட்டடத்துக்குள் நுழைந்த அமா் சிங், படிக்கட்டை தீ சூழ்வதற்கு முன்பாக அனைத்து மாணவா்களையும் பாதுகாப்பாக மீட்டாா். தீயணைப்புப் படை மற்றும் பிற காவல் துறையினா் சம்பவ இடத்துக்குச் செல்வதற்கு முன்பாக விரைந்து செயல்பட்டு அனைவரையும் மீட்டாா் என்றனா் அந்த அதிகாரிகள்.