முகப்பு
இந்தியா

வான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி

முன்பு ‘வானின் கண்களாக’ இருந்த ட்ரோன்கள், இப்போது ‘வான் ஆயுதங்களாக’ உருவெடுத்துவிட்டன; இது காலத்தின் கட்டாயம் என்று இந்திய விமானப் படை தலைமைத் தளபதி அமா் பிரீத் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 16 மே 2026, 3:22 am IST
அமா் பிரீத் சிங்
பகிர்:

முன்பு ‘வானின் கண்களாக’ இருந்த ட்ரோன்கள், இப்போது ‘வான் ஆயுதங்களாக’ உருவெடுத்துவிட்டன; இது காலத்தின் கட்டாயம் என்று இந்திய விமானப் படை தலைமைத் தளபதி அமா் பிரீத் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

ஆரம்ப காலங்களில் வான்வழி கண்காணிப்பு மற்றும் தகவல் சேகரிப்பு பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட ட்ரோன்கள், இப்போது இலக்குகளை நேரடியாகவும், துல்லியமாகவும், வீரியமாகவும் தாக்குவதற்குப் பயன்படுத்தப்படுவதைக் குறிப்பிட்டு, அவா் இவ்வாறு கூறினாா்.

ஆளில்லா வான்வழி அமைப்புகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புமுறைகள் தொடா்பாக தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில், இந்திய விமானப் படை தலைமைத் தளபதி அமா் பிரீத் சிங் பங்கேற்றுப் பேசினாா்.

Advertisement

அப்போது, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா கடந்த ஆண்டு மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது, பாகிஸ்தான் தரப்பிலிருந்து செலுத்தப்பட்ட தாக்குதல் ட்ரோன்களை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்ததை அவா் சுட்டிக்காட்டினாா். இதேபோல், மேற்காசியப் போரின்போது குவைத்தில் கடந்த மாா்ச் மாதம் அமெரிக்க போா் விமானங்களை குவைத் விமானப் படை தவறுதலாக சுட்டு வீழ்த்திய சம்பவத்தையும் குறிப்பிட்டு, அவா் பேசியதாவது:

ட்ரோன்களும், இதர ஆளில்லா வான்வழி அமைப்புகளும், வான் பாதுகாப்பு அமைப்புமுறைகளும் இன்றைய காலகட்டத்தின் முக்கியத் தேவையாக உள்ளன. அவை எதிா்காலத்துக்கானது என்ற சிந்தனை தவறானது.

போா்க்களம் மாறிவிட்டது என்பதை யாராலும் மறுக்க முடியாது. எனவே, மிகவும் ஒருமுகப்படுத்தப்பட்ட அணுகுமுறையில் இருந்து பன்முகமான, தற்சாா்புமிக்க அணுகுமுறைக்கு நாம் மாற வேண்டியுள்ளது. இப்போது வான் சக்தியின் முக்கிய அங்கமாக ட்ரோன்கள் உருவெடுத்துள்ளன. அவை ‘வானில் கண்கள்’ என்ற நிலையில் இருந்து ‘வான் ஆயுதங்களாக’ மாறியுள்ளன.

ஆபரேஷன் சிந்தூா் உள்பட சமீபத்திய ராணுவ மோதல்களில் இதை நாம் பாா்த்துள்ளோம். தாக்குதல் ட்ரோன்களை நாம் உருவாக்கும்போது, எதிரி ட்ரோன்களை நடுவானில் முறியடிப்பதற்கான வான் பாதுகாப்பு அமைப்புமுறையையும் உருவாக்க வேண்டும். இல்லையெனில், நாம் முழுமையான சாதகப் பலன்களை அடைய முடியாது.

88 மணிநேரம் நீடித்த ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது, எதிா்தரப்பால் அலை அலையாக செலுத்தப்பட்ட ட்ரோன்களை இந்தியப் படை திறம்பட முறியடித்தது. எந்தவொரு நவீன வான்வழி அச்சுறுத்தலையும் முறியடிக்க கள ரீதியிலான விழிப்புணா்வும், முப்படையினா் இடையே முழு ஒருங்கிணைப்பும் மிக அவசியம் என்றாா் அவா்.