ஈரான் அதிகாரிகளை சந்தித்த பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி!
இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வழிவகுப்பதற்காக பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி தெஹ்ரானில் ஈரானிய அதிகாரிகளை சந்தித்தது குறித்து...
அமைதிப் பேச்சுவார்த்தையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் அசீம் முனீர் தெஹ்ரானில் ஈரானிய அதிகாரிகளை வியாழக்கிழமை (ஏப்.16) சந்தித்தார்.
கடந்த ஏழு வாரங்களாக நடைபெற்று வரும் போர்ப் பதற்றத்தைத் தணிக்கும் வகையில், ஈரான் - அமெரிக்கா இடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வழிவகுப்பதற்காக நேற்று ஈரான் சென்ற பாகிஸ்தான் ராணுவத்தளபதி தெஹ்ரானில் அதிகாரிகளை இன்று சந்தித்துள்ளார்.
ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே கடந்த பிப்.28 ஆம் தேதி தொடங்கிய போர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர பாகிஸ்தான் தொடர்ந்து மத்தியஸ்தம் செய்துவருகிறது. இதன் ஒருபகுதியாக இஸ்லாமாபாதில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனால் பாகிஸ்தான் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக தீவிர முயற்சிகளை செய்து வருகிறது.
Advertisement
இதனிடையே, ஈரானுடனான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாதில் நடைபெற வாய்ப்புள்ளது என அமெரிக்கா தெரிவித்தது. இருப்பினும், பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதா இல்லையா என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
முன்னதாக அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் லெபனான்-இஸ்ரேல் இடையே செவ்வாய்க்கிழமை (ஏப்.13) நடந்த பேச்சுவாா்த்தை எவ்வித உடன்பாடும் இன்றி நிறைவடைந்தது.
மேலும், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் சௌதி அரேபியா, கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு புதன்கிழமை (ஏப். 15) அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.