அமைதிப்பேச்சு! பாக். ராணுவத் தளபதியுடன் ஈரானிய வெளியுறவு அமைச்சர் சந்திப்பு!
பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதியை ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி சந்தித்துள்ளது குறித்து...
பாகிஸ்தான் சென்றுள்ள ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அந்நாட்டு ராணுவத் தலைமைத் தளபதி ஆசிம் முனீரை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
பாகிஸ்தான் தலைமையில் நடைபெறும் அமெரிக்கா உடனான 2 ஆம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க, ஈரானிய வெளியுறவு அமைச்சர் அராக்சி தலைமையிலான பிரதிநிதிக் குழுவினர் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப். 24) மாலை இஸ்லாமாபாத் சென்றடைந்தார்.
இந்த நிலையில், இஸ்லாமாபாதில் பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி ஆசிம் முனீருடன் ஈரானிய அதிகாரிகள் முக்கிய உரையாடல்களை மேற்கொண்டதாக, சனிக்கிழமை காலை ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது.
Advertisement
இந்த நிகழ்வில், ஈரானிய வெளியுறவு செய்தித்தொடர்பாளர் இஸ்மாயில் பகாயி மற்றும் தூதர் ரெசா அமிரி மொக்தம் ஆகியோர் கலந்துகொண்டனர். இருப்பினும், இந்த உரையாடல் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
முன்னதாக, அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மருமகனும் அவர் நிர்வாகத்தின் மூத்த அதிகாரியுமான ஜராட் குஷ்னர் தலைமையிலான குழுவினர் இன்று பாகிஸ்தான் செல்வதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
மேலும், தோல்வியடைந்த முதற்கட்ட அமைதிப் பேச்சுக்குத் தலைமைத் தாங்கிய அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.