நில்... கவனி... கண்மணி! - மார்பக நோய்களும் மருத்துவத் தீர்வுகளும்; டாக்டர் சு.முத்துச்செல்லக்குமார்; பக். 80; ரூ.65; விகடன் பிரசுரம், சென்னை - 2; 044-4263 4283.
குழந்தைப் பருவம் முதல் ஒவ்வொரு கட்டமாக பெண்ணின் மார்பக வளர்ச்சி குறித்தும் ஒவ்வொரு பருவங்களின் போதும் அவை அடையும் மாற்றங்கள் குறித்தும் விரிவாகக் கூறும் நூல். மார்பகத்தில் புற்றுநோய் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள பெண்கள் தங்களுக்கு தாங்களே மார்பக பரிசோதனை செய்து கொள்ளும் முறைகள் விளக்கப்பட்டிருக்கின்றன. குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதின் அவசியம் குறித்தும் அப்படிக் கொடுப்பதின் மூலம் தாய்மார்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் பல செய்திகள் இருக்கின்றன.
மாதவிடாய்க் காலங்களில் பெண்களுக்கு மார்பகங்களில் வலி ஏற்படுவதால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பில்லை; மாதவிடாய் நேரங்களில் ஏற்படும் உடல் இயக்க மாறுதல்களாலும், ஹார்மோன் மாறுதல்களாலுமே அந்த வலி ஏற்படுகிறது என்று நூல் தெளிவுபடுத்துகிறது.
அதுபோல மார்பகத்தில் பல்வேறு சாதாரண கட்டிகள் ஏற்படலாம். இந்தக் கட்டிகளைப் பார்த்துப் புற்றுநோய்க் கட்டிகள் என்று பயப்படத் தேவையில்லை.
மார்பகங்களுக்கான தகுந்த உள்ளாடைகளைத் தேர்ந்தெடுப்பது, சருமப் பராமரிப்பு, குழந்தை பிறப்பதற்கு முன்பும் பின்பும் மார்பகங்களைப் பாதுகாக்கும் முறைகள் இந்நூலில் உள்ளன. மார்பகப் பாதுகாப்பில் நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுப் பழக்கங்களில் என்ன மாதிரியான மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் எனவும் என்னென்ன உடற்பயிற்சிகளில் ஈடுபடலாம் எனவும் நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்திய அளவிலும் உலக அளவிலும் நாளுக்கு நாள் மார்பகப் புற்று நோய் காரணமாக உயிரிழக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகும் சூழ்நிலையில் வெளி வந்திருக்கும் முக்கியமான நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.