தமிழக முதலமைச்சர்கள் ஓர் உலா
தமிழக முதலமைச்சர்கள் ஓர் உலா; குன்றில்குமார்; பக்.204; ரூ. 200; செந்தமிழ்ப் பதிப்பகம்; சென்னை-49; 044-26502086.
தமிழக முதல்வர்களாகப் பதவி வகித்தவர்கள் பற்றிய நூல். அவர்களின் சாதனைகள், வாழ்க்கை வரலாறு என பல தகவல்களைத் தருகிறது.
1952-இல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் காங்கிரஸூக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தேர்தலில் போட்டியிடாத ராஜாஜி முதல்வராகப் பதவியேற்றது, அரசியல், கொள்கைகளில் வேறுபாடு இருந்தாலும் ராஜாஜி-பெரியார் இடையேயான நட்பு, ராஜாஜி தலைமையேற்ற மேடையில் அண்ணாவின் உரை என ராஜாஜி பற்றிய கட்டுரையில் உள்ளது.
மதிய உணவுத் திட்டத்தை காமராஜர் தொடங்குவதற்கு காரணமாக இருந்த நிகழ்வு, கே-பிளான் திட்டப்படி முதல்வர் பதவியைத் துறந்து கட்சிப் பணிக்குத் திரும்பியது, சாஸ்திரி, இந்திரா காந்தியை பிரதமர்களாக அடையாளம் காட்டி "கிங் மேக்கராக' திகழ்ந்தது எனத் தெரிந்த வரலாறுதான் என்றாலும் இன்றும் அவை பெருமைக்குரியவை.
காமராஜருக்குப் பின்னர் பக்தவத்சலம் முதல்வரானது, 1967 பேரவைத் தேர்தலில் காங்கிரûஸ வீழ்த்தி திமுக முதல்முறையாக ஆட்சி அமைத்தது, மதராஸ் மாகாணம் என்று அதுவரை அழைக்கப்பட்டு வந்ததை தமிழ்நாடு என அண்ணா பெயர் மாற்றம் செய்தது, பெரியாருடன் அண்ணாவுக்கு ஏற்பட்ட முரண்பாடு என விரிவாக எடுத்துரைத்துள்ளார் நூலாசிரியர்.
அடுத்தடுத்து கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களுடன் தேர்தல் அரசியலையும், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் முதல்வரானது முதல் 2021, பேரவைத் தேர்தலில் வென்று மு.க.ஸ்டாலின் முதல்வரானது வரை பதிவு செய்துள்ளார். சமகால வரலாறு என்றாலும் அரிய தகவல்கள் நூலுக்கு சுவாரசியத்தைக் கூட்டுகின்றன.