நாவல் வடிவில் மணிமேகலை
நாவல் வடிவில் மணிமேகலை - சத்தியப்பிரியன்; பக். 240; ரூ. 260; சுவாசம் பதிப்பகம், சென்னை-127; 81480 66645.
சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தமிழர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்த இரட்டைக் காப்பியங்கள். மணிமேகலை கூறும் தத்துவக் கூறுகளும் வாழ்வியல் கருத்துகளும் அறம் தொடர்பான நிலைப்பாடுகளும் மிகவும் முக்கியமானவை. காதல் , துறவு வாழ்க்கைகளுக்கு இடையேயான அத்தனை முரண்பாடுகளையும் மணிமேகலை அலசும்.
நூலாசிரியர் இந்த நூலில் உள்ள அனைத்து ரசங்களையும் உள்ளடக்கி, நாவல் வடிவில் எழுதியதே பெரிய சவால். தத்துவப் போக்குகளை எளிய நடையில் விளக்கியுள்ளார். 30 அத்தியாயங்களிலும் கூற்றுகள், பண்பாட்டின் பல கண்ணிகளைத் தொட்டுச் செல்கின்றன.
பெருங்காப்பியத்தைச் சுருக்கியதாலோ என்னவோ, விரைந்தோடுவது போன்ற நடை அமைந்திருக்கிறது. ஆனாலும், வாசிக்கத் தொடங்கினால், சலிப்பின்றி விரைவாகப் படிக்கத் தோன்றுகிறது.
மணிமேகலையின் அழகில் மயங்கிய உதயகுமாரன் அவளைத் தொந்தரவு செய்வது, துறவியான அவள் காயசண்டிகையின் உருவில் மாறுதல், பின்னர் தொடரும் ஆபத்துகள், மணிபல்லவத்தீவை மையமாக வைத்துச் சொல்லப்படும் அமுதசுரபி... என்று விரிந்து இறுதியில் காஞ்சி நகரில் முடிகிறது.
சிறார்களும் படிக்க ஏற்ற வகையில் அமைந்துள்ளது நூலின் சிறப்பாகும். தமிழ் இலக்கியம் படிப்போரும், தமிழார்வலர்களும் படித்து பாதுகாக்க வேண்டிய நூல்.