கல்கியின் சிவகாமியின் சபதம்
அமரர் கல்கியின் புகழ்பெற்ற சிவகாமியின் சபதம் நாவலின் சுருக்கப்பட்ட வடிவம்
கல்கியின் சிவகாமியின் சபதம் (நான்கு பாகங்களின் சுருக்கம்) அனந்தசாய்ராம் ரங்கராஜன்; பக். 128; ரூ.150; சுவாசம் பதிப்பகம், சென்னை- 127; ) 8148066645.
அமரர் கல்கியின் புகழ்பெற்ற சிவகாமியின் சபதம் நாவலின் சுருக்கப்பட்ட வடிவம். 209 அத்தியாயங்களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களும் கொண்ட மூல நூலை 5 அத்தியாயங்களில் சுருக்கிக் கொடுத்துள்ளார் நூலாசிரியர். பொன்னியின் செல்வன் நாவலுக்கு முன்பே அமரர் கல்கியால் எழுதப்பட்ட சிவகாமியின் சபதம் பல்லவர் கட்டடக் கலையையும் சிற்பக் கலையையும் பரதநாட்டியக் கலையையும் சிறப்பாக எடுத்தியம்பும்.
வாதாபி மன்னன் புலிகேசியால் சிறைபிடிக்கப்பட்ட சிவகாமியின் சபதத்தை நரசிம்ம வர்மன் வாதாபிக்குப் படையெடுத்துச் சென்று நிறைவேற்றுவதுதான் இந்த நாவல். பொதுவாக, மூல நூல்களைக் குறுகிய வடிவத்தில் அளிக்கப்படும்போது, அதிலும் புகழ்பெற்ற நாவலைச் சுருங்கிய வடிவத்தில் கொடுக்கும்போது அதன் விறுவிறுப்பு , கதாபாத்திரங்களில் தன்மை கதைகளத்தில் தொடர்பு ஆகியவை விடுபடாமல் பார்த்துக் கொள்வது மிகவும் சிரமம். அதில், நூலாசிரியர் வெற்றி பெற்றுள்ளார்.
ஏற்கெனவே மூல நூலை வாசித்த பழைய வாசகர்களுக்கு இது புதிய அனுபவம். புதிய வாசகர்களுக்கு கல்கியின் மூல நூலைப் படிக்கத் தூண்டும் வகையில், இந்த நூல் அமைந்துள்ளது. புதிய வாசகர்கள், வரலாற்றையும், தமிழகத்தின் பெருமைகளையும் அறிந்துகொள்ள விரும்புவோர் அவசியம் படிக்க வேண்டிய நாவல்.