தமிழர் பண்பாட்டுப் பதிவுகள்
தமிழர் பண்பாட்டுச் சுவடுகளை ஆவணப்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் அடங்கிய நூல் இது.
தமிழர் பண்பாட்டுப் பதிவுகள் - குடவாயில் பாலசுப்ரமணியன்; பக். 280; ரூ. 280; அன்னம், தஞ்சாவூர், 75983 06030.
தமிழர் பண்பாட்டுச் சுவடுகளை ஆவணப்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் அடங்கிய நூல் இது. கி.பி. 5}ஆம் நூற்றாண்டில் வஜ்ரநந்தி என்ற சமணத்துறவி, சமயத் தலைவர்கள் கூடும் இடத்தை "சங்கம்' என்ற சொல்லால் குறித்ததை அடிப்படையாகக் கொண்டே புலவர்கள் பலர் கூடும் இடம் "சங்கம்' என அழைக்கப்படலாயிற்று என்று கூறும் "தமிழும் சங்கப் பலகையும்' கட்டுரையில் தொடங்கி, "நெல் விடு தூது' நூலில் இடம்பெற்றுள்ள 45 வகையான நெற்களில் ஒன்றான "குறுங்கை நம்பி சம்பா' என்பது திருக்குறுங்குடியில் கோயில் கொண்டுள்ள இறைவனின் பெயரால் அப்பெயர் பெற்றது என்பதை விளக்கும் "நெல்மணி', தாராசுரம் கோயிலில், திருப்பதிகம் பாடிய 108 ஓதுவார்களின் உருவத்தையும் சிற்பமாக வடித்து வைத்திருப்பதைக் கூறும் "தமிழ் பாடிய நூற்றெண்மர்', உலகில் வேறு எங்கும் இல்லாத "பஞ்சமுக வாத்தியம்' எனும் ஐந்து முகமுடைய குடமுழவத்தை வடிவமைத்து தாளமரபுப்படி இசைத்த பெருமைக்குரியவன் தமிழன்தான் என்பதை விளக்கும் "தமிழகம் தந்த குடமுழவம்' உள்ளிட்ட முப்பது கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
தமிழின் சிறப்புகளில் ஒன்றான கீழ்க்கணக்கு குறித்து விளக்குகிறது ஒரு கட்டுரை. ஒன்றாம் எண்ணுக்குக் கீழ் உள்ள முக்காலில் தொடங்கி அதிசாரம் வரை 32 பின்னங்கள் உள்ளன என்கிற செய்தி வியப்பளிக்கிறது. தற்காலத்தில் ஒருவரை கைது செய்ய நீதிமன்ற ஆணையை (வாரன்ட்) எடுத்துச் செல்வதுபோல் அக்காலத்திலும் இருந்தது என்பதும் அந்த ஆணைக்கு கரணம் என்ற பெயர் இருந்தது என்பதும், அப்பரின் திருவையாற்றுத் தேவாரத்தில் வரும் "வண்ண பகன்றிலொடு ஆடி' என்ற வரியில் இடம்பெறும் பகன்றில் என்பது மகன்றில் என்ற பறவையைக் குறிப்பதே என்பதும் சுவையான செய்திகள். பழந்தமிழர் பண்பாட்டை ஐயமின்றி அறிந்துகொள்ள இந்நூல் உதவும்.