மர்ம சந்நியாசி
1909-இல் இந்தியாவோடு இணைந்திருந்த வங்கதேசத்தில் சமஸ்தான இளவரசர் டார்ஜிலிங் மலைப்பகுதியில்...
மர்ம சந்நியாசி - எஸ்.பி.சொக்கலிங்கம்; பக்.128; ரூ.150; கிழக்கு பதிப்பகம், சென்னை-14, 044- 42009603.
1909-இல் இந்தியாவோடு இணைந்திருந்த வங்கதேசத்தில் சமஸ்தான இளவரசர் டார்ஜிலிங் மலைப்பகுதியில் ஓய்வுக்காகச் சென்ற போது அவர் இறந்து விட்டதாக தகவல் வருகிறது. இது நிகழ்ந்து சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு சந்நியாசி ஒருவர், தான்தான் சமஸ்தான இளவரசர் மோஜோ குமார் என்று கூறி அதிர்வை ஏற்படுத்துகிறார். அவர் இளவரசரா, அவ்வாறெனில் இறந்தவர் யார், இந்தச் சதிக்குப் பின்னணியில் இருப்பவர்கள் யார் போன்ற கேள்விகளுக்கான விடை சற்றும் கற்பனைக்கு எட்டாதவை.
மர்ம முடிச்சுகள், விசாரணை வழி அவிழும் வரை, திடுக்கிடவைக்கும் திருப்பங்கள் ஏராளம். சந்நியாசிக்கு ஆதரவாக சமஸ்தான மக்கள்; எதிராக ஆங்கிலேய அரசாங்கம், இளவரசரின் மனைவி பிபாவதி, மைத்துனர் சத்தியபாபு.
டிஎன்ஏ இல்லாத அந்தக் காலத்தில், மோஜோகுமாரை அவரது பழக்க, வழக்கங்கள், அங்க அடையாளங்கள் மூலம் ஏற்கவும் மறுக்கவும் எடுக்கப்பட்ட சிரமங்களையும் விசாரணையையும் கண்முன்னே காட்சிப்படுத்துகிறார் வழக்குரைஞரான நூலாசிரியர்.
அந்தரங்க உறுப்புப் பகுதி மச்சம் முக்கிய அடையாளமாக ஏற்கப்படுவது, வழக்கில் குறிப்பிடத்தக்கத் திருப்புமுனை. மேல் முறையீடுக்கு லண்டன் ப்ரிவி கவுன்சில் வரை சென்று சந்நியாசி தான் மோஜோகுமார் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், அவரை தனது கணவராக பிபாவதி ஏற்கவில்லை.
சாட்சியங்களை மிக நுணுக்கமாக அணுகி, ஆராய்ந்து நீதிபதி வழங்கிய தீர்ப்பு முக்கிய ஆவணமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. வாசிக்கப்பட வேண்டிய நூல்.