உப்பா புட்டுக்கடை (நாவல்)
உப்பா புட்டுக்கடை (நாவல்) - அழகு மித்ரன்; பக்.244; ரூ.240; சாய் கம்யூனிகேஷன்ஸ், நாகர்கோவில்; 94867 17927.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளரும், ஆவணப்பட இயக்குநருமான நூலாசிரியர் தமது வட்டார வழக்கு மொழியில் எழுதியுள்ள நாவல்.
காதலித்து மணம் முடித்தவன் இறந்துபோக குழந்தையுடன் வந்த பெண்ணுக்கு அடைக்கலம் கொடுக்கும் பாத்துமா - உப்பா குடும்பம். பானு, இஸ்மாயில், ஈராளன், சுஜித்ரா, அடிக்கடி வம்பு பேச கடைக்கு வந்து போகும் மீரான் என எல்லா கதாபாத்திரங்களும் நடைமுறை வாழ்வில் சந்திக்கும் மனிதர்களை நினைவூட்டுகிறார்கள்.
கற்றாழை நாரில் கூடை பின்னும் தொழில் பெண்களின் சுய முன்னேற்றம் குறித்து விளக்குகிறது. முத்துவின் விருப்பம் சாயிரா மீதுதான் என்பதை அறிந்த அவனுடைய பெற்றோர் தடுக்க, இறுதியில் சாயிராவை மணந்து எம்மதமும் சம்மதம் என்று அவரவர் சடங்கு, சம்பிரதாயத்தைப் பின்பற்றி வாழ்வது அழகு.
பூஜையறையில் சுவாமி படங்களுடன் உப்பா படம் இடம்பெறுவது அருமையான காட்சி. அன்பு நிறைந்த சமூக வெளியில் மிருக இயல்பு மாறாத சிலரால் பலரின் வாழ்வு சிதைவதை நம்முன் எடுத்து வைக்கிறார் நாவலாசிரியர்.
உயிரோட்டத்துடன் கதாபாத்திரங்களைப் பேசவைத்து, கதை சொல்லியிருக்கிறார்.
மலையாளக்கரையோரம் உலவிவிட்டு வந்த அனுபவத்தைத் தரும் நாவல், மத நல்லிணக்கத்தை வலியுறுத்துகிறது.