புதிய தளத்தில் சங்க இலக்கியம்
புதிய தளத்தில் சங்க இலக்கியம் - கு.கணேசன், பக்.416, ரூ.380, மணிமொழிப் பதிப்பகம், சேலம்- 636015; 94430 89255.
அகப் பாடல்களில் உள்ள புறக் கூறுகளையும், புறப்பாடல்களில் எடுத்தாளப்பட்ட வரலாற்றுக் குறிப்புகளையும் நூலாசிரியர் தொகுத்துக் கூறியிருப்பது பாராட்டுக்குரியது. 41 தலைப்புகளில் சங்க கால யுகத்தில் தொடங்கி சதக இலக்கியம் வரையில் ஆய்வுக்கு உட்படுத்தியிருப்பது புதுமையாகும்.
சங்கத் தமிழர் வழிபாட்டில் எத்தகைய முறையைக் கையாண்டனர் என்று திருமுருகாற்றுப்படை செய்யுளின் மூலம் எடுத்துரைக்கப்படுகிறது. நற்றிணையில் வரும் பண்பெனப்படுவது எனும் சொற்றொடரையும், குறளில் வரும் பண்புடையார்ப் பட்டுண்டுலகம் எனும் சொல்லையும் இணைத்து தமிழரின் பண்பாட்டை விளக்கியிருப்பது போல பல கூறுகள் விளக்கப்பட்டிருப்பது சிறப்பு.
சங்க இலக்கியப் பாடல்களில் உள்ள மொழிநடையழகு, இலக்கண வகைகளை எடுத்துரைத்திருக்கிறது. காதல் திருக்குறளில் எப்படி அறம் பிறழாது குறிப்பிடப்பட்டுள்ளது என்பது ஓர் கட்டுரையில் வியக்க வைக்கிறது. அன்னதானம் சங்க கால தமிழரின் தொன்று தொட்ட வழக்கமாக இருந்ததை புறநானூறு, மணிமேகலை மூலம் எடுத்தியம்பியுள்ளார். சிலப்பதிகாரச் சிந்தனை மூலம் மூவேந்தர் வரலாற்றை அவர்களின் ஆட்சிக்கால மதநல்லிணக்கம், கலை வளர்ச்சியையும் வரலாற்று வழிநின்று விளக்கியுள்ளார்.
சங்கத் தமிழ் கலை இலக்கியத்தில் சேலத்தின் பங்களிப்பை தனித்தலைப்பாக விளக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆவண நூல் இது.