அனைத்தும் உனக்குள்
அனைத்தும் உனக்குள் - வழக்குரைஞர் த.இராமலிங்கம்; வானதி பதிப்பகம், தி.நகர், சென்னை-17; 044-24342810; பக்.440; ரூ.400.
ஒளவை, பாரதி, பாரதிதாசன் ஆகிய பெருந்தமிழ் புலவர்கள் மூவரின் ஆத்திசூடிகளையும் பகுப்பாய்வு செய்து அடுத்த தலைமுறையினர் அவசியம் வாசிக்க வேண்டிய வரிகளை எடுத்தியம்பியிருக்கும் நூல் இது.
ஒளவையின் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், பாரதியின் புதிய ஆத்திசூடி, பாரதிதாசனின் ஆத்திச்சூடி, இளையோர் ஆத்திசூடி ஆகிய அற நூல்களின் துணை நூலாக இது வெளிக்கொணரப்பட்டுள்ளது. கூடவே குறளையும் துணைக்கு அழைத்துக் கொண்டு நீதி போதித்திருக்கிறார் நூலாசிரியர்.
அறம் செய்ய விரும்பு என்றும், அச்சம் தவிர் என்றும் ஆத்திசூடிகளின் முதல் வரியை மட்டுமே அறிந்திருக்கும் பலருக்கு அவற்றின் முகவரியை முழுமையாகக் காட்டுவதாக இருக்கிறது இந்த புத்தகம். பொதுவாக அனைவரும் அறிந்த பாடல்களை மட்டும் எடுத்துரைக்காமல், ஆத்திசூடிகளுக்குள் புதைந்திருக்கும் அரிய தகவல்களை பக்கத்துக்கு பக்கம் வாசகனுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார் நூலாசிரியர்.
உயிர் எழுத்துகள், உயிர்மெய் எழுத்துகள், க வரிசை, ம வரிசை என தனித்தனி வரிசைகளில் அமைந்த பாடல்களை தேர்வு செய்து கட்டுரைகளாக கொடுத்திருப்பது சிறப்பு.
நூலின் மையப் பொருள் மூன்று தமிழ் பெரும் புலவர்களின் ஆத்திசூடிதான் என்றாலும், அதனுடன் நிறுத்திக் கொள்ளாமல், அதை அடிப்படையாகக் கொண்டு புறநானூறு, திருக்குறள் என அனைத்து இலக்கியங்களும் அலசப்பட்டுள்ளன. நூலில் எடுத்தாளப்பட்டுள்ள ஒவ்வொரு வரிக்கும் விளக்கம் அளிப்பது மட்டுமன்றி அதனை சமகால விஷயங்களுடன் ஒப்பாய்வு செய்திருப்பது ஈர்ப்புக்குரியது.