FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு!

சென்னையில் 3 வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறித்து..

Updated On : 25 ஏப்ரல் 2026, 1:18 pm IST
சென்னையில் 3 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள துணை ராணுவத்தினர். - டிஎன்எஸ்
பகிர்:

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அதற்கென ஒதுக்கப்பட்ட 3 வாக்கு எண்ணும் மையங்களில் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து, வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், 540 சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் வியாழக்கிழமை காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்காளர்கள் வாக்களித்தனா். மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அரசியல் கட்சி வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

பின்னா், மண்டல அலுவலா்கள் மூலம் அவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வியாழக்கிழமை இரவு வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டு தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையங்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் பத்திரமாக வைக்கப்பட்டன.

3 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள்

சென்னையில் 3 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, லயோலா கல்லூரி, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம், ராணிமேரி கல்லூரி ஆகிய வளாகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

லயோலா கல்லூரியில் கொளத்தூர், வில்லிவாக்கம் மற்றும் அண்ணா நகர் உள்ளிட்ட 6 தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள், ராணிமேரி கல்லூரியில் ஆர்.கே. நகர் மற்றும் ராயபுரம் உள்ளிட்ட 5 தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள், அண்ணா பல்கலைக்கழகத்தில் தியாகராய நகர் (தி. நகர்) மற்றும் வேளச்சேரி உள்ளிட்ட 5 தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைகளில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு

அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் வந்தவுடன் அந்த பாதுகாப்பு அறை அனைத்து கட்சி முகவா்கள், உயா் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. அங்கு வரும் மே 4 -ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரிகள், பல்கலைக்கழக வளாகங்களில் சுற்றிலும் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், தொடர் கண்காணிப்பை உறுதி செய்வதற்காக 540 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

இதற்காக ராணிமேரி கல்லூரியில் 172 கேமராக்களும், லயோலா கல்லூரியில் 188 கேமராக்களும், அண்ணா பல்கலைக்கழகத்தில் 180 கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

முதல்வட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தின் மிக அருகே உள்ள அதாவது வலுவான அறை (ஸ்ட்ராங் ரூம்) இருக்கும் இடமாகும். அந்த பகுதி முழுவதும் மத்திய துணை ராணுவ படையினரின் கட்டுப்பாட்டிலும், இரண்டாம் அடுக்கில் (நடுவட்டம்) மாநில ஆயுதப் படை காவலா்களும், மூன்றாம் அடுக்கில் (வெளிவட்டம்) சென்னை ஆயுதப்படை காவலர்களும், வாக்கு எண்ணும் மையத்தின்(வளாகங்கள்) உள்ளூர் சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து காவல் துறையினா் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதைதவிர ஸ்ட்ராங் ரூம்கள் 24 மணி நேரமும் 540 சிசிடிவி கேமராக்களால் தொடா்ந்து கண்காணிக்கப்படுகிறது. வேட்பாளா்களின் முகவா்கள் ஸ்ட்ராங் ரூமிற்கு வெளியே உள்ள பகுதியில் இருந்து கண்காணிப்பில் ஈடுபடலாம். ஸ்ட்ராங் ரூம் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட வளாகத்திற்குள், தோ்தல் அதிகாரிகள் உள்பட யாருடைய வாகனங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அனைத்து வாகனங்களும் வெளிப்பகுதியிலேயே நிறுத்துமாறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

3 ஷிப்டுகளாக பாதுகாப்பு

இந்த 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் துணை ராணுவ படையினருடன் இணைந்து உள்ளூா் மற்றும் வெளியூா் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் 3 ஷிப்டுகளாக ஈடுபட்டுள்ளனா்.

வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள வரும் மே 4 ஆம் தேதி வரை சுழற்சி முறையில் தொடா்ந்து 24 மணி நேரமும் போலீஸாா் பாதுகாப்பு பணியில் இருப்பாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Electronic Voting Machines used in 16 Assembly constituencies in Chennai have been safely transported to designated counting centers and placed in strong rooms under heavy security.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments