இடம்பெயர்ந்தவர்களின் கதை (நாவல்)
இடம்பெயர்ந்தவர்களின் கதை (நாவல்) - முனைவர் சுப்பையா ராஜேந்திரன்; பக். 295; ரூ.330; காவ்யா, சென்னை-77; ✆ 044- 2372 6882.
கேரள மாநிலத்துக்கு உள்பட்ட இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த நூலாசிரியரின் சிறப்பான நூல்களில் இதுவும் ஒன்று.
மதுரை, தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த தமிழர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கேரளத்தில் பிழைப்புக்காகத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாகப் பணியாற்றச் சென்றனர். இவ்வாறு புலம்பெயர்ந்து பல தலைமுறைகளாக வாழ்ந்துவரும் பனிமலை எஸ்டேட் தொழிலாளர்களின் வாழ்க்கையை நூலாக்கியுள்ளார். ஒரு நாவலாகச் சென்றாலும், தொழிலாளர்களின் வாழ்வியல் முறைகள்தான் நூல் வெளிக்கொணருகிறது.
உழைப்பு, முயற்சி, சுரண்டல், கற்பு, மதம், வறுமை, இயற்கைச் சீற்றங்கள், வனவிலங்குகளின் தாக்குதல்கள் போன்ற தோட்டத் தொழிலாளர்களிடையே நடைபெறும் அன்றாட நிகழ்வுகளை உள்வாங்கி, அவர்களின் நடையிலேயே கற்பனை கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது. இதில் வரும் பகுதிகளில் பல உண்மைச் சம்பவங்கள்தான்.
நூலின் ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும், வாழ்க்கைக்குத் தேவைப்படும் நல்லதொரு கருத்து சில வரிகளில் குறிப்பிட்டுள்ளது அன்றாட வாழ்வில் பின்பற்ற வேண்டிய நற்குணங்களைத் தெரிவிக்கிறது.
'வாழ்க்கை வாழ்வதற்கே!' என்று பல்வேறு இன்னல்களுக்கு இடையே, சாதி, மத, மொழி, இன பிரச்னைகளுக்கு இடையே வாழ்க்கையின் மகத்துவத்தை இந்த நூல் வெளிப்படுத்துகிறது. நூலைப் படிக்க எடுத்தவுடன் முடித்துவிட்டுதான் வைக்க வேண்டும் என்ற விறுவிறுப்பை ஏற்படுத்தும் இந்த நாவல் புதியதொரு அனுபவம்தான்.