கம்பனில் பெண்ணியம்
கம்பனில் பெண்ணியம் - உரை சத்யநாராயணராஜ் பாலகுரு (எழுத்தாக்கம் அ.சுப்ரமணியன்); பக். 194; ரூ.ரூ. 250; தமிழால் இணைவோம் பதிப்பகம், சென்னை-64; ✆ 94424-77645.
கம்பராமாயணத்தில் பெண் கதாபாத்திரங்களை கம்பன் எப்படி படைத்துள்ளார்; சிறப்பித்துள்ளார் என்பதை ஆய்வு நோக்கில் விவரிக்கிறது இந்நூல். அன்றே போர், அறிவு, பேச்சு, ஆளுமை உள்ளிட்ட பன்முகத் திறன்களைக் கொண்டவர்களாக பெண்கள் இருந்துள்ளனர் என்பதை இந்நூல் பதிவு செய்துள்ளது. சீதை, சூர்ப்பனகை, அகலிகை, மந்தரை, தாரை, கோசலை, கைகேயி, மண்டோதரி, சபரி இப்படி பல கதாபாத்திரங்களின் முக்கியத்துவம் குறித்து விவரிப்பது மட்டுமல்லாமல், பெண்ணிய நோக்கில் இன்றைய வாழ்வியலுடன் ஒப்பிட்டு பல்வேறு கேள்விகளை எழுப்பிச் சிந்திக்கவும் வைத்துள்ளது இந்நூல்.
சீதை பிரிந்த அதே நேரத்தில் தானே ராமனும் பிரிந்தான். அப்படி இருக்கையில் சீதையை மட்டும் கற்பை நிரூபிப்பதற்காக தீக்குளிக்கச் சொல்வது எந்த வகையில் நியாயம்? கற்பு என்பது பெண்ணுக்கு மட்டும் உரியதா? தன்னுடைய காதலை எந்தவித அச்சமும் இல்லாமல் தைரியமாக சூர்ப்பனகை சொன்னதைப் பாராட்டுவதோடு நில்லாமல், காதலைச் சொல்வதால் மூக்கை அறுப்பதா? கணவன் உருவில் வந்ததால்தானே அகலிகை ஏமாந்தாள். அதற்கு 'கல்லாய் போ' என்ற சாபம் தரலாமா என்பது போன்ற கேள்விகளை எழுப்புவதோடு, புரட்சிகர சிந்தனைக்கும் இந்நூல் வித்திட்டுள்ளது.
கம்பராமாயணத்தின் கவிநயம், பக்தி, காப்பியச் சிறப்பு என மட்டும் பேசப்பட்டு வந்த நிலையில், பெண்ணியக் கருத்தியலோடு அணுகி பெண்ணியத்தைப் பெருமைப்படுத்தி உள்ளது இந்த நூல்.