ஒரு நிமிடக் கதை
ஒரு நிமிடக் கதை (100 கதைகள் அடங்கியது)- மதுரை வி.இராமகிருஷ்ணன்; பக்.112; ரூ.150; முல்லைப் பதிப்பகம், சென்னை-40; ✆ 98403 58301.
கவிஞர், தொலைக்காட்சியில் நகைச்சுவை பேச்சாளர், சுய முன்னேற்ற பேச்சாளர், இணையதளத்தில் இளைஞர்களைக் கவர்ந்தவர் என்று பன்முகத் தன்மை கொண்டவர் நூலாசிரியர். இணையதளத்தில் ஒரு நிமிடக் கதையாகச் சொல்லியவற்றில் அதிகம் பகிரப்பட்டதை நூலாக்கியுள்ளார்.
'வாழ்க்கை ஒரு நாளில் மாறாது. ஆனால் ஒவ்வொரு நாளாய் மாறும். இந்தக் கதைகள் உங்கள் வாழ்க்கையில் எண்ணங்களில் மிகப் பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என்பதில்
சந்தேகமே இல்லை' என்று நூலாசிரியர் கூறுவது உண்மை என்பது படித்துப் பார்க்கும்போது தெளிவாகிறது.
கல்வி, தொழில், வாழ்க்கை, குடும்பம், தனி மனித வாழ்க்கை போன்றவற்றில் நாம் சிறந்தோங்க எவ்வாறு நடக்க வேண்டும் என்பதற்கான அறிவுறுத்தல்தான் இந்த நூல். ஒரு
பக்கத்தில், ஒரு நிமிடத்தில் வாசித்து முடிக்கும் வகையில் 100 கதைகள் உள்ளன; ஆனால், வாழ்க்கையின் எதார்த்தத்தை இரு மணி நேரத்தில் முழுமையாக அறியும் வகையில் உள்ளன.
வாசிக்கத் தொடங்கினால், படித்துமுடித்துவிட்டே வைக்கத் தோன்றும் வகையில், ஒவ்வொரு கதையும் விறுவிறுப்பை ஏற்படுத்துவதோடு மனதில் எளிதில் பதியும் வகையில் எழுதப்பட்டுள்ளது நூலாசிரியரின் தனித்துவம்.
விவேகானந்தர், அப்துல் கலாம் போன்றோர் வாழ்க்கையில் நடந்த சுவாரசிய மான நிகழ்ச்சிகளில் நல்லதொரு நீதியை உணர்த்துபவை கதைகளாகச் சொல்லப்பட்டுள்ளன. இளைய தலைமுறையினருக்கும், வாழ்க்கையில் முன்னேற துடிப்பவர்களுக்கும் இந்த நூல் ஒரு பொக்கிஷம்.