நபிகள் நாயகம் அழகிய வரலாறு
நபிகள் நாயகம் அழகிய வரலாறு - தாழை எஸ்.எம். அலீ (தாழை மதியவன்); பக். 200; ரூ. 110; சாஜிதா புக் சென்டர், சென்னை -1; ✆ 98409 77758.
அண்ணல் நபி (ஸல்) பற்றி எண்ணற்ற நூல்கள் வெளிவந்திருக்கின்றன. நல்ல தமிழில், சுருக்கமாக, ஆனால் முழுமையானதாக வந்திருக்கிறது இந்த நூல்.
நபிகள் நாயகத்தின் காலத்துக்கு முந்தைய நிலைமைகள், அவருடைய காலத்து நிலைமைகள், புரோகித சமுதாயமாக, வணிக சமுதாயமாக வாழ்ந்தவர்கள், போராளிகள் சமுதாயமாக மாறிப் பின்னர் ஆட்சியாளர்களாகவும் உயர வைத்த அண்ணலின் வரலாறு, தக்க சான்றுகளுடன் நூலில் எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது.
வணிகத்தில் வெற்றி பெற்ற நபிகள் நாயகத்தின் திருமணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதுடன் இல்லற வாழ்வையும் விவரிப்பதுடன், அன்றைய மக்காவில் நிலவிய தீமைகளை விளக்கி, நபிகள் நாயகத்தின் தேடலும் முதல் வசனத்தை அவர் பொழிந்த சூழலும் சிறப்பாக விளக்கப்படுகிறது.
இஸ்லாத்தின் தோற்றத்துடன், 'இறைவன் ஒருவன், அவன்தான் அகிலங்களைப் படைத்தான், அவனுடைய தூதர் நான்' என்று தொடங்கிய அண்ணலாரின் எடுத்துரைப்பும் அந்தக் காலகட்டத்தில் அவர் எதிர்கொண்ட இன்னல்களும் நூலில் விவரிக்கப்படுகின்றன.
எதிர்ப்பாளர்கள் முன்வைத்த மூன்று கேள்விகள், வானவர்களிடமே பெற்றுத் தெரிவித்த இதற்கான அண்ணலாரின் பதில்கள் எனப் படிப்படியான இஸ்லாமின் பரவலும் கூறப்பட்டிருக்கிறது.
ஊர் விலக்கம், யத்ரீப் மதீனாவான விதம், பத்ரூ - உஹதுப் போர்கள், அகழிப் போர் என விவரிக்கும் நூலில், "முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள், இனி ரத்தம் சிந்துவதற்கோ, பழிவாங்கல்களுக்கோ இடமில்லை...' என்று தொடங்கிய இறுதிப் பேருரையையும் மிகச் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
அண்ணலாரின் பண்பும் பண்பாடும் பற்றிக் குறிப்பிடும்போது, எளிமை, கொடை மனம்,
அன்பு, உண்மை, நாணயம், வீரம் என அனைத்துப் பக்கங்களும் வெளிப்படுத்தப்படுகின்றன. நபிகள் நாயகத்தின் அழகிய வரலாற்றை எளிதில் அறிந்துகொள்ள உதவும் நன்னூல்.