விந்தன் கதைகள் (25 கதைகள்)
விந்தன் கதைகள் (25 கதைகள்) - விந்தன்; பக். 208; ரூ.150; முல்லை பதிப்பகம், சென்னை- 40; 98403 58301.
இந்த நூலுக்கு முன்னுரையை ஆசிரியர் கல்கி எழுதியிருக்கிறார். அதன் சாராம்சம்: ஒரு காலத்தில் குறிப்பிட்ட சாதியைச் சார்ந்த எழுத்தாளர்கள் அதிகம் இருந்தார்கள்.
அவர்களது சாதியைச் சார்ந்தவர்களே சிறுகதை- நாவல்களைப் படிக்கிறவர்களாக இருந்தார்கள்.
மற்ற சாதியாரைப் பற்றி இந்த எழுத்தாளர்கள் எழுதினால் நடை, உடை, பாவனைகள் அவ்வளவு சரியாக இருக்காது. காட்டிக் கொடுத்துவிடும். உண்மை ஒளிவீசும் சிறுகதையை எழுதுவதற்கு எளியவர்கள்- உழைப்பாளி மக்களிடையே ஆசிரியர்கள் தோன்ற வேண்டும்.
அந்த எழுத்தில் இலக்கிய மணம் பொருந்த வேண்டும். இந்த லட்சணங்கள் பொருந்தியவர் விந்தன் என்கிற வி.கோவிந்தன்'' என்கிறார் கல்கி. 'வாழப் பிறந்தவன்', 'மனித யந்திரன்', 'ரிக்ஷாவாலா', 'நாத்தனார்' உள்ளிட்ட 25 தலைப்புகளில் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.
இந்த நூலில் இடம்பெற்றுள்ள கதைகளில் பாட்டாளியின் துயரத்தையும், விவசாயிகளின் வேதனைகளையும், ஏழை எளியவர்களின் வாழ்க்கை அவலத்தையும், அவர்களின் சுக துக்கங்களையும் உறவுச் சிக்கல்களையும் பதிவு செய்திருக்கிறார் விந்தன்.
வாழ்க்கை, காதல், தெய்வம், உறவினர்கள், பண்டிகை என்று பல்வேறு விஷயங்களை இளைய தலைமுறையினருக்கு உணர்த்தும். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நீதியை வெளிப்படுத்துகின்றன. சிறுகதை வாசிப்போருக்கு பயனுள்ள நூல் இது.