சனாதன தர்மம்
சனாதன தர்மம் - மொழிபெயர்ப்பு: ந. முரளிதரன்; பக். 160; ரூ.130; அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை - 4; ✆ 044-2464 1314.
நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாரணாசி ஹிந்து கல்லூரி வெளியிட்ட வடமொழி நூலின் தமிழாக்க நூல் இது.
சனாதன தர்மம் என்பதன் பொருள், தொடக்கமும் முடிவும் இல்லாத நிரந்தர வாழ்க்கை முறையே என்பதாகும். வேதங்களை அடிப்படையாகக் கொண்ட சனாதன வாழ்க்கை முறையின் சடங்குகள், வழிபாடுகள், நம்பிக்கைகள், பொது மரபுகளை விவரிக்கிறது இந்த நூல்.
ஹிந்து மதம் குறித்த 23 கட்டுரைகளே மூன்று பாகங்களில் இடம்பெற்றுள்ளன. முதலாவது பாகத்தில் மறுபிறப்பு, கர்மா, நிவேதனம், இரண்டாவது பாகத்தில் ஹிந்து மதச்சடங்குகள், வழிபாடு, சௌசம் எனப்படும் தூய்மை, மூன்றாவது பாகத்தில் நல்லொழுக்கம், தீயொழுக்கம், சுயமதிப்பு, ஒழுக்கவியலின் அளவுகோல் போன்றவை குறித்தும் விளக்கிக் கூறப்பட்டுள்ளன.
சாசுவத மதத்தின் வாழ்க்கை முறையில் வழிபாடு குறித்து குறிப்பிடும்போது, 'சர்வ வியாபியான அதாவது எங்கும் பரவியிருக்கும் சர்வேஸ்வரன், தொழக் கூடிய ஒரு பொருள் அல்ல; ஆனால், மனதை ஒருநிலைப்படுத்த ஒரு வடிவம் தேவையாக இருக்கிறது. அந்த வடிவத்தை சிவனாக எண்ணலாம். விஷ்ணுவாக நினைக்கலாம். துர்க்கையாகவோ லட்சுமியாகவோ கருதலாம்.
அவதார தெய்வங்களான ராமனாகவோ கிருஷ்ணனாகவோ எண்ணி வணங்கலாம்' என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியர்.
'ஒவ்வொருவரும் தங்களது குரு, முன்னோர்கள், தேவர்கள் ஆகிய மூவருக்கான கடன்களைத் திரும்பச் செலுத்தினால்தான் ஒருவரின் வாழ்வு முழுமை பெறும் என்கிறது சாத்திரம்' என்கிறார் நூலாசிரியர்.
பழைமையான சனாதன தர்மம் குறித்து அறிவதற்கும், ஹிந்து மதத்தினர் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்தும் ஐயமற விவரமறிய இந்நூல் நிச்சயம் உதவும்.