சினிமா போஸ்டர்
சினிமா போஸ்டர் - ஈஸ்வர்; பக்.184; ரூ.300; விஜயா பப்ளிகேஷன்ஸ், சென்னை-26; ✆ 044- 2365 2007.
இளமைக் காலத்தில் கடினமான சூழ்நிலையில் இருந்து, திரை ஓவியத் துறையில் 1967-இல் தொடங்கி 2,000-ஆம் ஆண்டு வரையில் 313 தமிழ்ப்படங்களுக்கு விளம்பர ஓவியங்களை ஈஸ்வர் வரைந்துள்ளார். இதுதவிர, தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களுக்கும் ஓவியங்களை வரைந்தவர். அவர் வரைந்த எஸ்.எஸ்.வாசன், நாகி ரெட்டியார், சக்கரபாணி, எம்ஜிஆர், சிவாஜி, ஜெயலலிதா உள்ளிட்டோரின் ஓவியங்களைப் பார்க்கும்போது, நிஜத்தைப் போலவே தென்படுகிறது.
இளம்வயது அனுபவம், கலைப்பயணம், நாடக அரங்கேற்றம், தனது குடும்பச் சூழல், வாழ்க்கை நிலை, ஊர்கள் இடம்பெயர்தல், திருமணம், திரைத்துறை பிரவேசம் உள்ளிட்ட ஈஸ்வரின் வாழ்க்கை அனுபவத்தைப் படிக்கும்போது, அவரது சாதனைக்குப் பின்னால் உள்ள சோதனைகள் கண்களில் நீரை வரவழைக்கிறது.
எம்ஜிஆர். , சிவாஜி, சின்னப்ப தேவர் உள்ளிட்ட திரைத்துறை பிரமுகர்கள் குறித்த ருசிகர தகவல்களையும் அவர் பதிவு செய்துள்ளார்.
வீட்டில் சண்டையிட்டு பயணச்சீட்டு இல்லாமல் ரயிலில் பயணித்து பரிசோதகரிடம் சிக்கிய எம்.கோவிந்தசாமி நாயுடுவுக்கு சக பயணி அபராதம் செலுத்தி, பெங்களூருக்கு அழைத்துச் சென்று தையல் பயிற்சி அளித்ததும், அவர் 1939-இல் சென்னை தி.நகரில் தையல் கடை வைத்து 'நாயுடு ஹால்' என்ற ஜவுளி சாம்ராஜ்ஜியத்தை நிறுவியதும் என பல வியப்பூட்டும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நூல் இளைய தலைமுறை ஓவியர்களுக்கு வழிகாட்டும் நூல்தான்.