அமெரிக்க உள்நாட்டுப் போர்
அமெரிக்க உள்நாட்டுப் போர் - வானதி; பக்.224; ரூ.260; கிழக்கு பதிப்பகம், சென்னை -14; ✆ 044-42009603.
சரியான காரணத்தோடு நன்மையின் பொருட்டு நடைபெற்ற போர்களில் ஒன்று 'அமெரிக்க உள்நாட்டுப் போர்'.
கருப்பின மக்களுக்கு விடுதலை அளித்து அடிமை முறையை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக நடத்தப்பட்ட இந்தப் போர் மனித குல வரலாற்றில் ஒரு மைல் கல். எந்தவொரு மனிதனும் இன்னொருவரைவிடத் தாழ்ந்தவர் கிடையாது என்று வடக்கு மாகாணங்களும், தங்களது தோட்டங்களுக்கு அடிமைகளின் உழைப்பு அவசியம் என தெற்கு மாகாணங்களும் கொள்கை அளவில் வேறுபட்டன. இந்த வேறுபாடு அரசியல், தேர்தல், நாடாளுமன்றம் என படிப்படியாக பல்வேறு தளங்களில் காத்திரமாக எதிரொலித்து உள்நாட்டுப் போருக்கு எப்படி இட்டுச் சென்றது என்பதை இந்நூல் விவரிக்கிறது.
போரால் நாடு இரண்டாகப் பிரிவதை எந்தச் சூழலிலும் ஆப்ரகாம் லிங்கன் விரும்பவில்லை. அவரது ஆட்சிக்காலத்தின் பெரும் பகுதியை உள்நாட்டுப் போர் விழுங்கியதோடு மட்டுமல்லாது, அவருடைய உயிரையும் பறிக்க காரணமாயிற்று. போர் சுமார் 10 லட்சம் பேரை பலிகொண்டு முடிவுற்றது. ஆனாலும் இன்றைக்கும் அந்நாட்டில் நிறவெறி நிலவுவது வேதனை அளிக்கிறது.
அமெரிக்கப் பேரரசின் அடிப்படை வரலாறு, நிலப்பரப்பு, ஆப்ரகாம் லிங்கனின் அசாத்திய தலைமைப் பண்பு, முதல் போர், தீபகற்ப போர், விக்ஸ்பர்க் முற்றுகை, பீட்டர்ஸ்பர்க் முற்றுகை உள்ளிட்ட பல்வேறு கூறுகளை இந்நூல் எடுத்தியம்புகிறது.