குறுந்தொகையில் ஓரெழுத்து-பொருள் நுட்பம்
குறுந்தொகையில் ஓரெழுத்து-பொருள் நுட்பம் - முனைவர் நா.சுலோசனா, ரூ.110; பக்.186; உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை-113; ✆ 044,- 22542992.
தினமணி முன்னாள் ஆசிரியர் ஏ.என்.சிவராமனின் நினைவாக, 2015-ஆம் ஆண்டில் ஆசிரியர் கி.வைத்தியநாதனால் தொடங்கப்பட்ட அறக்கட்டளையில் நூலாசிரியர் ஆற்றிய சொற்பொழிவே, தொகுக்கப்பட்டு குறுந்தொகையில் ஓரெழுத்து-பொருள் நுட்ப நூலாக்கப்பட்டுள்ளது.
தமிழ் என்பது உலகின் பழமையான மொழி மட்டுமல்ல; அதன் எழுத்து, சொல் ஆகியவை உருவான விதம் பல ஆச்சரியங்களையும், அறிவியல்பூர்வமான அர்த்தங்களையும் உள்ளடக்கியதாக இருப்பதை நூலாசிரியர் எடுத்துரைக்கிறார்.
ஓரெழுத்தானது ஒரு சொல்லாகி எப்படியெல்லாம் பல பொருள்களைத் தருகிறது என்பதை குறுந்தொகைப் பாடல் வாயிலாக நூலாசிரியர் விளக்கியுள்ளார். தொல்காப்பியம் ஏழு நெட்டெழுத்துகளை ஒரு மொழி எனக்கூறும் நிலையில், அதுவே நன்னூலில் நாற்பத்திரெண்டாகியிருப்பதாகவும் அவர் கூறுகிறார். ஆச்சரிய பொருள் தரும் அருந்தமிழ் எழுத்துகள் ஏராளம் என்பதை அறியும்போது வியப்பாக உள்ளது.
குறுந்தொகையில் 21 பெண்பாற்புலவர்களது பாடல்கள் இடம் பெற்றிருப்பதாகக் கூறும் நூலாசிரியர், அவர்களில் ஒவ்வொருவரது குறுந்தொகைப் பாடல் பங்களிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.
குறுந்தொகையில் ஓரெழுத்து-பொருள் நுட்பத்தை மட்டுமல்லாது, மொத்த குறுந்தொகைப் பாடல்களையும் ஆய்ந்து அதன் சாராம்சத்தை இளம்தலைமுறை தமிழ் ஆய்வாளர்கள் மட்டுமல்லாது தமிழ் ஆர்வலர்களும் எளிதில் அறியும் வகையில் அமைந்திருப்பதே நூலின் தனித்தன்மையாகும்.