கல்கி பிறந்த தமிழ்நாடு
கல்கி பிறந்த தமிழ்நாடு - மு.பரமசிவம்; பக்.312; ரூ.400; வேமன் பதிப்பகம், சென்னை-34; ✆ 044-28211134.
கல்கியைப் பற்றி 5 கட்டுரைகளோடு, டால்ஸ்டாய், விந்தன் உள்ளிட்ட முன்தலைமுறை எழுத்தாளர்கள் பற்றிய ஓர் அனுபவக் குறிப்பு - அலசல் நூல் இது.
சுதந்திரப் போராட்ட வேட்கையில் 'ஆனந்த விகடன்' வேலையைத் துறந்ததும் பின்னர் தனது பெயரிலேயே 'கல்கி' என்ற பத்திரிகையைத் தொடங்கியதும் தமிழுக்கும் மன உறுதிக்கும் சான்றாகத் திகழ்கின்றன. அதேபோல, ஜீவா, விந்தன் குறித்தும் ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
பாரதிதாசன், திரு வி.க., மாயூரம் வேதநாயகம் பிள்ளை, ஜெயகாந்தன் என விரிவான பரப்பில் எழுத்தாளர்கள் குறித்த எண்ணங்கள் பதிவிடப்பட்டுள்ளன.
முற்போக்கு நாட்டம் உடைய நூலாசிரியர் தான் தேர்ந்தெடுத்த எழுத்தாளர்களின் படைப்புகளையும் வாழ்வியல் காட்சிகளையும் அந்தக் கண்ணோட்டத்திலேயே அணுகி நமது சிந்தனைக்கு அளித்திருப்பது இந்த புத்தகத்தின் அடிப்படை அம்சம். அதற்கு மகாகவி பாரதியும் விதிவிலக்கல்ல!
'நான் எழுதுவதற்காக வாழ்கிறேன்; வாழ்வதற்காக எழுதவில்லை' என்ற வரிகளுடன் முடியும் வெ.சாமிநாத சர்மாவின் எழுத்துலக வாழ்க்கைக் குறிப்பு இந்தத் தொகுப்பின் அருமையான பகுதிகளில் ஒன்று.
நூலைப் படித்து முடிக்கும்போது, ஒரு காலகட்டத்தின் மாமனிதர்கள் நிறைந்த அரங்கில் அவர்களிடையே புகுந்து அவர்களைக் கண்டும் கேட்டும் நடந்து வந்த ஓர் அலாதியான அனுபவம் கிடைக்கிறது.