முகப்பு
நூல் அரங்கம்

கறைக்கண்டன் சேவடி சேர்ந்த காரைக்கால் அம்மையார்

Updated On : 30 அக்டோபர், 2023 at 7:39 PM
பகிர்:

கறைக்கண்டன் சேவடி சேர்ந்த காரைக்கால் அம்மையார் - இராமநாதன் பழனியப்பன்;  பக்.352; ரூ.250; முல்லைப் பதிப்பகம், சென்னை-40; ✆ 044- 2616 3596.

காரைக்கால் வணிகர் குலத் தலைவர் பெருஞ்செல்வரான தனதத்தனின் செல்வத் திருமகளாகப் பிறந்து செல்வச் செழிப்பில் பண்புடன் வளர்ந்த புனிதவதி, நாகப்பட்டினத்து வணிகரான பரமதத்தனை மணந்து, இனிதாக வாழ்ந்து, பிறகு சிவபெருமானின் திருவருளால் மாங்கனிகள் செய்த மாயத்தால், காரைக்கால் அம்மையாராக மாறிய வரலாற்றை ஆய்வு நோக்கத்தில் அணுகும் நூல்.

'சிவனை சம்பந்தர் அம்மை அப்பனாகவும், நாவுக்கரசர் ஆண்டானாகவும், சுந்தரர் தோழனாகவும், மாணிக்கவாசகர் காதலனாகவும், கண்ணப்பர் இறைவனாகவும் பார்த்தனர்; ஆனால், காரைக்கால் அம்மையாரை சிவனே அம்மையாகப் பார்த்தார்'  என்பதே காரைக்கால் அம்மையாரின் சிறப்பு.

Advertisement

அந்த வகையில் 'காரைக்கால் அம்மையார் புராணக் காட்சிகள்' முதல் 'காரைக்காலில் மாங்கனித் திருவிழா' வரையிலான கட்டுரைப் பகுதிகளை சேக்கிழாரின் பெரியபுராணம், தொல்காப்பியம், திருக்குறள், அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம், தேவாரம், திருவாசகம், திருமந்திரம், கம்பராமாயணம் என ஏராளமான நூல்களிலிருந்து மேற்கோள்களையும், ஒப்பீடுகளையும் காட்டி நூலாசிரியர் விளக்கியுள்ளார்.

அம்மையாருக்கு நடந்தவை அனைத்தும் இறைவன் நடத்திய திருவிளையாடல்கள்தானோ எனக் கருதுவதற்கு ஏதுவான நிகழ்வுகளைப் பட்டியலிடும் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பிரமிக்க வைக்கிறது.

அம்மையார் தனிக் கோயில் கொண்டுள்ள காரைக்கால் அம்மையார் திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாத பௌர்ணமி நாளில் நடைபெறும் மாங்கனித் திருவிழா தொடர்பான கட்டுரை சிறப்பு.

காரைக்கால் அம்மையார் அருளிய அற்புதத் திருவந்தாதி, திருஇரட்டை மணி மாலை மூலமும் உரையும், மூத்த திருப்பதிகம்-1, 2 ஆகியவை நூலின் கடைசிப் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. ஆன்மிக அன்பர்களுக்கு வரப்பிரசாதம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.