சுப்ரமண்ய சிவா
சுப்ரமண்ய சிவா - ரகமி; பக்.136; ரூ.135; பாரதி இலக்கியப் பயிலகம், திருவையாறு - 613 204; ✆ 9551078352.
'சிவமும் பிள்ளையும் இல்லாவிட்டால் இந்தப் பாரதி வெறும் குருடன்' என்று மகாகவி பாரதியாரால் பாராட்டப்பட்ட தியாகி சுப்ரமண்ய சிவாவின் வாழ்க்கை வரலாற்றை இந்நூல் விவரிக்கிறது.
சிவாவின் இளமைப் பருவம் தொட்டே அவர் துணிச்சலும் அடாவடி சுபாவம் மிக்கவராகவும் அறியப்பட்டார். ஆன்மிகத்திலும், பராசக்தியின் மீது தீவிர பக்தியும் கொண்டிருந்தார். இக்குணங்களே பின்னாளில் அவர் ஆங்கில ஆட்சியை தீரத்துடன் எதிர்த்துப் போராட அடிப்படையாக அமைந்தன.
வ.உ.சி. - சிவா ஆகியோருக்கு எதிரான திருநெல்வேலி சதி வழக்கு, சிவாவின் அம்மா, மனைவி ஆகியோர் மறைவின்போதுகூட மனம் கலங்காது தேச விடுதலைக்காகப் பாடுபட்டது, வறுமையிலும் 'ஞானபாநு' பத்திரிகையை நடத்தி சுதந்திரக் கனல் மூட்டியது, சிறையில் சிவா அனுபவித்த கொடுமைகள், சிறைவாசத்தில் அவர் எழுதிய நூல்கள், தொழுநோயால் பாதிக்கப்பட்டபோதும் மனம் தளராது நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆங்கிலேய அரசுக்கு எதிரான பிரசாரம், தொழிற்சங்கச் செயல்பாடுகள், பாரத மாதாவுக்கு கோயில் கட்டியது, மகாத்மா காந்தியுடனான சந்திப்பு உள்ளிட்ட இந்நூல் பதிவு செய்துள்ள பல்வேறு சம்பவங்கள் ஓர் உன்னத தேச பக்தரின் வலி நிறைந்த வாழ்க்கையை உணர்ச்சிப் பெருக்குடன் எடுத்தியம்புகிறது.
சிவா மறைந்தபோது தருமபுரி சுற்றுவட்டார மக்கள் பெருந்திரளாக வந்து அஞ்சலி செலுத்திய நிகழ்வு, அவரை எந்த அளவுக்கு எளிய மக்கள் நேசித்தனர் என்பதை எடுத்துரைக்கிறது. 'சிவம் பேசினால் சவம் எழுந்து நிற்கும்' என்பது சிவா குறித்து தேச பக்தர்கள் கூறும் கூற்று. படிக்கவும், பாதுகாக்கவும், இளைய தலைமுறையினர் கட்டாயம் அறியவும் வேண்டிய நூல் இது.